அஸ்ஸாமில் பெரும் வெள்ளம்... ரயில் போக்குவரத்து பாதிப்பு... மக்கள் அவதி!
அஸ்ஸாமில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 11 ரயில்கள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அஸ்ஸாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 22.5 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் அங்கு வெள்ளப் பெருக்கும் அதன் விளைவால் ஏற்படுகிற பாதிப்பும் அதிகமாக உள்ளது. பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து வாடி வருகின்றனர். இதுவரை வெள்ளத்துக்கு மொத்தம் 102 உயிர்கள் பலியாகி உள்ளன. மொத்தம் 3,192 கிராமங்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்படைந்துள்ளன. அதில் 1.79 லட்சம் ஹெக்டேரில் விளைவிக்கப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.
வெள்ளப் பாதிப்பின் காரணமாக வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய ரயில்கள் கத்திகர் அல்லது மால்டா ரயில்நிலையங்களில் ஆகஸ்டு 16ஆம் தேதி காலை வரை நிறுத்தப்படும் என வடகிழக்கு ரயில்வே நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் பிரணவ் ஜோதி சர்மா தெரிவித்துள்ளார்.
பீகார், அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 72 மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதனால், இப்பகுதிகளில் இருந்து செல்ல வேண்டிய 11 ரயில்கள் இன்று நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், மேலும், 4 ரயில்கள் வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மழையின் பாதிப்பு குறைந்த பின்பே ரயில்வே சேவை தொடங்கப்படும் என்றாலும் நாளைக் காலை முதல் சில ரயில்கள் மட்டும் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.