கொரோனா 2-வது அலை:மத்திய அரசு கடும் பாரபட்சம், அலட்சியம்- ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காட்டம்
ராஞ்சி: கொரோனா 2-வது அலையை கையாள்வதில் மத்திய அரசு சரியாக செயல்படுவதில்லை; மாநிலங்களை பாரபட்சமாகவே அணுகுகிறது என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
The Sunday Express-க்கு ஹேமந்த் சோரன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கொரோனா என்பது நாடு தழுவிய தேசிய பிரச்சைனையா? அல்லது மாநிலங்களின் பிரச்சனையா?
மத்திய அரசு இந்த பிரச்சனையில் இருந்து நழுவவும் முடியாது.. பொறுப்பை தட்டிக் கழிக்கவும் முடியாது. மத்திய அரசு உரிய அனுமதி தராததால் எங்களால் போதுமான மருந்துகளை இறக்குமதி செய்ய இயலவில்லை. இருந்தபோதும் ஏதோ ஒருவகையில் மாநிலங்கள் சமாளித்து வருகின்றன.

ஒதுக்கீட்டில் பாரபட்சம்
கொரோனா பேரிடர் தொடர்பான அனைத்தையும் மத்திய அரசு தன்கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது. ஆக்சிஜன் ஒதுக்கீடு, மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசி ஒதுக்கீடுகளை மத்திய அரசுதான் செய்கிறது. ஆனால் எங்களுக்கு போதுமான தடுப்பூசிகள், மருந்துகள் கிடைக்கவில்லை.

கஜானா திவாலாகும்
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 3.5 கோடி முதல் 4 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவை. ஆனால் வெறும் 40 லட்சம் தடுப்பூசிகள்தான் எங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. மும்பை மாநகராட்சி என்பது மிகப் பெரிய உள்ளாட்சி அமைப்பு. அதனால் கொரோனா தடுப்பூசிகளுக்கு சர்வதேச டெண்டர் கோர முடியும். ஆனால் ஜார்க்கண்ட் மாநிலத்தால் அது இயலாது. அப்படி அத்தனை தடுப்பூசிகளையும் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வாங்கித்தான் ஆக வேண்டும் எனில் கஜானா திவாலாகிவிடும்.

சண்டை போடும் நேரம் அல்ல
ஜார்க்கண்ட் மாநிலத்தை எப்படி மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய பெரிய மாநிலங்களுடன் எப்படி ஒப்பிட முடியும்? எங்களது பட்ஜெட் ஒதுக்கீடே மிக மிக குறைவானது. நமது நாட்டைப் பொறுத்தவரை பல்வேறு கட்சிகள், சித்தாந்தங்களை நாம் முன்வைக்கலாம். ஆனால் அதனை முன்வைத்து சண்டை போட்டுக் கொண்டிருக்கக் கூடிய நேரம் இது அல்ல. இப்போது நடுக்கடலில் மூழ்கும் நிலையில் படகு தத்தளித்துக் கொண்டிருக்கிற நிலைதான். முதலில் கரை சேர வேண்டும். அதற்கு பின்னர் கட்சி, சித்தாந்த சண்டைகளை பார்த்துக் கொள்ளலாம்.

மத்திய அரசு மீது புகார்
கொரோனா 2-வது அலையை மத்திய அரசு சரியாக கையாளவில்லை. மாநிலங்களில் மத்தியில் ஆளும் பாஜக கட்சி ஆட்சி செய்தால் முழு ஆதரவு தருகிறது... எதிர்க்கட்சிகள் எனில் சாகவிட்டுவிடுகிறார்கள். பிரதமர் நிவாரண நிதியின் கீழ் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பெறப்பட்டது. அந்த நிதி என்ன ஆனது? நிச்சயமாக இது தொடர்பாக வெளிப்படைத்தன்மை அவசியம் தேவை. பிரதமர் நிதி தொடர்பாக இந்த தேசத்தின் மக்களுக்கு அரசாங்கம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இவ்வாறு ஹேமந்த் சோரன் கூறினார்.












Click it and Unblock the Notifications