10 ஆண்டுகளாக பரபரப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கு!
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
டெல்லி: கடந்த 10 ஆண்டுகளாக மக்களால் பெரிதும் பேசப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது மீது குற்றச்சாட்டு எழுந்தது.
டெல்லி சிபிஐ கோர்ட்டில் 7 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு கடந்த வந்த பாதை குறித்து வாசகர்களுக்கு நினைவூட்டுவதற்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பம்
மே 2007 அன்று மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக அ.ராசா பொறுப்பேற்றுக் கொண்டார். அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுக்கான நடைமுறைகள் தொடங்கின. செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதியாக அக்.1, 2007-ஆம் தேதியை தொலைத்தொடர்பு அமைச்சகம் நிர்ணயித்தது. அன்றைய தினம் தொலைத்தொடர்பு துறையில் 46 நிறுவனங்களிடமிருந்து 575 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன.
ராசாவுக்கு கடிதம்
நவம்பர் 2-ஆம் தேதி பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்யுமாறு ராசாவுக்கு கடிதம் எழுதினார். கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பதை கடைப்பிடிக்க தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டது. ஸ்வான் டெலிகாம், யூனிடெக், டாடா டெலி சர்வீசஸ் ஆகியன தங்கள் பங்குகளின் சில பகுதியை எடிசாலட், டெலிநார் மற்றும் டோகோமோவுக்கு அதிக விலைக்கு விற்றன. கடந்த 2009-ஆம் தேதி மே 4-ஆம் தேதி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்துக்கு (சிவிசி) புகார் கடிதம் அனுப்பியதை தொடர்ந்து அந்த புகாரை சிபிஐ விசாரிக்க சிவிசி உத்தரவிட்டது.
சிபிஐ உதவியை நாடியது
அக்டோபர் 21-ஆம் தேதி தொலைத் தொடர்பு துறையில் அதிகாரிகள், நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. அடுத்த நாளே தொலைத் தொடர்பு துறை அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. பின்னர் நவம்பர் 16-ஆம் தேதி நீரா ராடியா மற்றும் இடைத்தரகராக இருந்தவர்களின் தகவல்களைப் பெற வருமான வரி துறை இயக்ககத்தின் உதவியை சிபிஐ நாடியது. அமைச்சராக இருந்த ராசாவுடன் ராடியாவுக்கு தொடர்பிருந்தது நவம்பர் 20-ஆம் தேதி தெரியவந்தது. மார்ச் 31, 2010 அன்று அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என சிஏஜி அறிக்கை தாக்கல் செய்தது. மே 6- ஊடகங்கள் மூலம் ராசாவுக்கும் ராடியாவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் பகிரங்கமாக ஒலிப்பரப்பானது.
சு.சுவாமி வழக்கு
கடந்த 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்18-ஆம் தேதி 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக ராசாவிடம் விசாரணை நடத்த பிரதமர் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் அவ்வாறு உத்தரவிட மறுப்பு தெரிவித்தது டெல்லி உயர்நீதிமன்றம். செப்டம்பர்13-ஆம் தேதி, தொலைத்தொடர்பு அனுமதி வழங்கியதில் ரூ.70 ஆயிரம் கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் 10 நாள்களுக்குள் அ.ராசா பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. செப்டம்பர் 24-ஆம் தேதி அலைக்கற்றை முறைகேட்டில் தொடர்புடைய அ.ராசாவிடம் விசாரணை நடத்த அனுமதிக்க பிரதமருக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார் சு.சுவாமி. அக்டோபர் மாதம் முறைகேடு தொடர்பாக சிஏஜி அறிக்கைக்கு விளக்கம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் கேட்டு கொண்டது. நவம்பர் 10-ஆம் தேதி 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டால் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என சிஏஜி அறிக்கை தாக்கல் செய்தது. நவ.14-15-ஆம் தேதி தொலைத்தொடர்பு துறை அமைச்சர் பதவியை அ.ராசா ராஜினாமா செய்தார்.
கலைஞர் டிவி கைமாற்றும் பணி
கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி 2 ஜி முறைகேட்டால் பயணடைந்தவர்களின் வீடுகளை சிபிஐ கண்காணிப்பு வளையத்துக்கு கொண்டு வர சுப்ரீம் கோர்ட் கேட்டு கொண்டது. ஆ. ராசாவிடம் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. பிப். 17-18- ஸ்வான் டெலிகாம் நிறுவனத் தலைவர் ஷாகீத் பால்வாவுடன் நீதிமன்றக் காவலில் ராசா திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பிப்ரவரி 24-ஆம் தேதி முறைகேடு பணத்தை திமுகவின் கலைஞர் டிவி கைமாற்றும் பணியை எளிதாக்கியது ஷாகீத் பால்வாதான் என டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது. மார்ச் 14-ஆம் தேதி 2 ஜி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்படுத்தியது. மார்ச் 29- மார்ச் 31-க்குப் பதிலாக ஏப்ரல் 2-இல் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. ஆசிப் பால்வா மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜர்
ஏப்ரல் 2-ஆம் தேதி அ.ராசா, சந்தோலியா மற்றும் பெகுரா, கவுதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா, ஷாகீத் பால்வா உள்பட 9 பேர் மீதும், ரிலையன்ஸ், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் வயர்லெஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஏப்.25- ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் இதர 4 பேர் மீது சிபிஐ 2-ஆவது முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மே 6-ஆம் தேதி கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜரானார். மே 20-ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு கனிமொழி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அக்.23-ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. நவ.11-ஆம் தேதி வழக்கு விசாரணை தொடங்கியது நவ.23- ஆம் தேதி நாயர், தோஷி, பிபாரா, சந்திரா மற்றும் கோயங்கா உள்ளிட்ட பெருநிறுவன இயக்குநர்களுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது. நவம்பர் 28-ஆம் தேதி கனிமொழி, குமார், மொராணி, ஆசிப் மற்றும் ராஜீவ் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சு.சுவாமி மனுதாக்கல்
நவ.29-ஆம் தேதி ஷாகீத் பால்வாவுக்கும், டிசம்பர் 1-ஆம் தேதி சந்தோலியாவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பிப். 2, 2012-இல் ராசாவின் பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட 122 டெலிகாம் அனுமதிகள் ரத்துசெய்யப்பட்டன. 2ஜி வழக்கில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதை சிறப்பு நீதிமன்றத்தின் முடிவுக்கு நீதிபதிகள் விட்டுவிட்டனர். பிப்.4-இல் ப.சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்க சு.சுவாமி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிப். 23- இல் ப.சிதம்பரத்துக்கு எதிராக சு.சுவாமி சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்.அத்துடன் அவரிடம் விசாரணை நடத்த பொது நலன் வழக்கையும் தாக்கல் செய்தார். மார்ச் 1-இல் 2ஜி வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் சட்ட துறை அமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித் ஆகியோருக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது. ஏப்ரல் 4-இல் சிதம்பரத்துக்கு எதிரான மனுவின் விசாரணை தொடங்கியது. ஆக.24-இல் 2ஜி முறைகேட்டால் ப.சிதம்பரம் பயனடைந்ததற்கான முகாந்திரம் இல்லை என கூறி அவருக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.
ராசா வாக்குமூலம்
ஏப். 25, 2014-இல் ராசா மற்றும் கனிமொழி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மே 5-இல் பிரதமர் மன்மோகன் சிங்கின் இசைவுக்கேற்ப தான் செயல்பட்டதாக ராசா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். ஜூன் 1, 2015-இல் 2ஜி மூலம் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி கிடைத்ததாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டியது. ஆக. 19-இல் ராசாவுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ பதிவு செய்தது. நவம்பர் 3-இல் தன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி கனிமொழி தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏப்.19, 2017- இல் இறுதி வாதங்களை நிறைவு செய்தது. சிறப்பு நீதிமன்றம் ஜூலை 5-ஆம் தேதி அன்று செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஷைனி தெரிவித்தார்.
இன்று தீர்ப்பு
ஜூலை 15-இல் இரு தரப்பினரின் எழுத்துப்பூர்வமான விளக்கங்கள் பதிவு செப்டம்பர் 20-இல் அக்டோபர் 25-ஆம் தேதி இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி அறிவித்திருந்தார். சில ஆவணங்களை தயார் செய்ய வேண்டி இருப்பதால் தீர்ப்பு தேதி நவம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றாவது தீர்ப்பு தேதி வெளியாகுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்புகள் தயார் செய்ய காலஅவகாசம் தேவைப்படுகிறது என்பதால் தீர்ப்பு தேதி இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.