இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏன் உயர்கிறது தெரியுமா? மத்திய அமைச்சர் சொன்ன காரணத்தை பாருங்க
கவுகாத்தி: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாட்டில் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி அதற்கு ஒரு புது விளக்கம் கொடுத்துள்ளார்.
மத்திய அரசு இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கி வருவதுதான் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்றும், ஒரு லிட்டர் பெட்ரோலை விட ஒரு லிட்டர் இமயமலை தண்ணீர் விலை அதிகம் என்றும் ராமேஸ்வர் தெலி கூறியுள்ளார்.
அஸ்ஸாமின் திப்ருகர் மக்களவை தொகுதி உறுப்பினர் ராமேஸ்வர் தெலி. மத்திய இணை அமைச்சராகவும் உள்ளார்.
குரு பெயர்ச்சி பலன் 2021: கும்ப ராசிக்கு போகும் குருபகவானால் லாபத்தை அடையப்போவது யார் தெரியுமா
தடுப்பூசிக்கு பணம்
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில், நடைபெற்ற கூட்டத்தில் வைத்து, இவ்வாறு அவர் பேசியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பெட்ரோல், டீசலுக்கு போடும் வரியை குறைக்க முடியாது. கோவிட் -19 தடுப்பூசிகளுக்கான பணம் எங்கிருந்து வரும்? நீங்கள் தடுப்பூசிகளுக்கு பணம் செலுத்தவில்லை. தடுப்பூசிகளுக்காகும் செலவை இந்த வரிகளிலிருந்துதான் ஈடுகட்டி வருகிறோம்.
இலவச தடுப்பூசி
நாட்டிலுள்ள 130 கோடி மக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது எங்கள் இலக்கு. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு தடுப்பூசிக்கும் விலை ரூ.1200 என்ற அளவில் உள்ளது. எனவே இதற்கு ஆகும் செலவீனங்களை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது.
மாநில அரசு வரி
ஒரு லிட்டர் பெட்ரோல் அடிப்படை விலை ரூ.40. மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிதான் மிச்சத் தொகையாக உள்ளது. அசாமை பொறுத்தளவில் நாட்டிலேயே மிக குறைவான வாட் வரியை விதிப்பது இந்த மாநிலம்தான். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 28 ரூபாய் மாநில அரசு வரியாக விதிக்கப்படுகிறது. மத்திய அரசு வரி 30 ஆகும்.
காங்கிரஸ் அரசுகள் அதிக வரி
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு, நாட்டிலேயே அதிக அளவுக்கு பெட்ரோல் மீது வாட் வரி விதிக்கிறது. ஆனால் மோடி அரசுக்கு கெட்ட பெயர் வருகிறது. மகாராஷ்டிரா மாநில அரசும் அதிக வாட் வரியை விதிக்கிறது. ஆனால் கெட்ட பெயர் மத்திய அரசுக்கு வருகிறது.
இலவச சிலிண்டர்
மத்திய அரசு உஜ்வாலா-2 திட்டத்தை தொடங்க உள்ளது. 1 கோடி பெண்களுக்கு இலவச எல்பிஜி இணைப்பை வழங்க உள்ளோம். கோவிட் -19 நிலைமையை சமாளிக்க எனது அமைச்சகத்தின் நிதி சுகாதார அமைச்சகத்திற்கு திருப்பி விடப்பட்டது. இப்படித்தான் கொரோனாவுக்கு எதிராக இந்தியா போரிட்டு வருகிறது. இவ்வாறு ராமேஸ்வர் தெலி கூறினார்.