மதரஸாவில் இந்து சிறுவர்கள், ஆர்.எஸ்.எஸ். பள்ளியில் முஸ்லீம் சிறுவர்கள்: விசில் போடு
ராம்பூர்: உத்தர பிரதேசத்தில் 11 இந்து சிறுவர்கள் மதரஸாவிலும், 140 முஸ்லீம் சிறுவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பள்ளியிலும் சேர்ந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பத்தேஹ்பூர் மாவட்டத்தில் பலரும் வியக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பத்தேஹ்பூர் மாவட்டத்தில் 11 இந்து சிறுவர்கள் மதரஸா ஜாமிஅத்துல் அன்சாரில் சேர்ந்துள்ளனர். மேலும் 140 முஸ்லீம் சிறுவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
இது குறித்து மதரஸாவின் தலைமை ஆசிரியர் காலித் அன்சாரி கூறுகையில்,
உருது
இந்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் உருது மொழி மிகவும் பிடித்துள்ளது. அவர்களுக்கு உருது கவிஞர்களான மிர்சா காலிப், பிராக் கோரக்பூரி, ஜிகார் மொராதாபாதி உள்ளிட்டோரின் கவிதைகள் பிடித்துள்ளது என்றார்.
தொழுகை
11 இந்து சிறுவர்கள் மதரஸாவில் சேர்ந்துள்ளனர். அவர்கள் பிற பாடங்களுடன் உருது மொழியையும் கற்க உள்ளனர். அவர்கள் பிற மாணவர்களுடன் சேர்ந்து காலையில் தொழுகின்றனர் என்றார் அன்சாரி.
ஆர்.எஸ்.எஸ். பள்ளி
ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜிதேந்திர சிங் கூறுகையில், 140 முஸ்லீம் சிறுவர்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் பிற மாணவர்களுடன் சேர்ந்து சூர்ய நமஸ்காரம் செய்துவடன் வேதப் பாடல்களை பாடுகிறார்கள். அவர்கள் பிற மாணவர்களுடன் சேர்ந்தே மதிய உணவு சாப்பிடுகிறார்கள் என்றார்.
மாணவர்கள்
எங்கள் பள்ளியில் படித்த தனிஷ் முஸ்தபா சவுதியில் என்ஜினியராக வேலை பார்க்கிறார். மேலும் எங்கள் பள்ளியில் படித்த நூற்றுக்கணக்கான முஸ்லீம் மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நல்ல வேலையில் உள்ளனர் என்றார் சிங்.