'இதுதான் இந்தியா'.. 50 ஆண்டுகளாக மசூதியை பராமரிக்கும் இந்து குடும்பம்.. மேற்கு வங்கத்தில் நெகிழ்ச்சி
கொல்கத்தா: சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகள், பல்வேறு மத குழுக்களிடையே மோதல்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வகுப்புவாத பதற்றம் பற்றிய செய்திகளை நாம் அடிக்கடி கேட்க நேரிடுகிறது.
ஆனால் மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து குடும்பம் 'நம்மிடையே சாதி மத வேறுபாடு இருக்க கூடாது; என்பதுபோல் மகத்தான காரியம் ஒன்றை செய்து வருகிறார். அதனை பற்றி இப்போது காண்போம்.
காந்தியை நிந்தித்த சாமியார்கள் - ஹரித்வாரை அடுத்து சர்ச்சையில் ராய்பூர் மத மாநாடு
பாகிஸ்தானில் இருந்து வந்தனர்
1964-ம் ஆண்டு அப்போதைய கிழக்கு பாகிஸ்தானின் குல்னா பகுதியில் இருந்து கலவரம் காரணமாக ஈஸ்வர் நிரோத் போஸ் என்பவர் தமது குடும்பத்தினருடன் மேற்கு வங்க மாநிலம் பராசத் பகுதிக்கு குடியேற வந்தார். இதனை தொடர்ந்து குல்னாவில் உள்ள தங்கள் இடத்திற்கு பதிலாக பராசத்தில் இருந்த கியாசுதீன் மொரோல் என்பவரது நிலத்தை ஈஸ்வர் போஸ் சட்டப்படி இடமாற்றம் செய்து கொண்டுள்ளார்.
50 ஆண்டுகளாக மசூதி பராமரிப்பு
அந்த நிலத்தில் ஒரு சிறிய மசூதி இருப்பதை கண்டார். 'இந்த மசூதியை நான் பராமரித்து நடத்த விரும்புகிறேன்' என்று கியாசுதீன் மொரோலிடம், ஈஸ்வர் போஸ் கூறியுள்ளார். அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த 50 ஆண்டுகளாக அந்த மசூதியை தொடர்ந்து கவனித்து வருகின்றனர் , ஈஸ்வர் போஸின் குடும்பத்தினர்.
எங்களின் வாரிசுகள் தொடர்ந்து செய்வார்கள்
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய ஈஸ்வர் போஸின் மகன் 74 வயதான தீபக் போஸ், 'எனக்கு 14 வயது, நாங்கள் பாகிஸ்தானில் தொடர்ச்சியான கலவரங்களுக்குப் பிறகு, பராசத்திற்கு வந்தபோது, சட்டப்படி, குல்னாவில் உள்ள கியாசுதீன் மோரோல் என்ற நில உரிமையாளருடன் சதுர அடிக்கு அந்த நிலத்தை மாற்றிக் கொண்டோம். அங்கு இருந்த மசூதியை நாங்கள் எங்கள் சொந்த விருப்பத்தின்பேரில் பராமரித்து வருகிறோம். இன்னும் பல தலைமுறைகள் சென்றாலும் எங்களின் வாரிசுகள் இந்த மசூதியை பராமரிக்கும்' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
மதத்தால் மோதிக்கொள்ளும் ஒருசில மனிதர்களுக்கு...
ஈஸ்வர் போஸின் குடும்பத்துக்கு மேற்கு வங்க மட்டுமில்லாது, இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. ''இது சமூக நல்லிணத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு' 'மதத்தால் மோதிக்கொள்ளும் ஒருசில மனிதர்களுக்கு இதுதான் இந்தியா'' என்று ஈஸ்வர் போஸின் சுட்டிகாட்டுவதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.