இந்து திருமணங்கள் என்ன ஒப்பந்தமா?, அலகாபாத் கோர்ட் கண்டனம் ஜெயம் ரவிக்கு பொருந்துமா?
அலகாபாத்: இந்து திருமணங்கள் புனிதமானது என்றும் அந்த திருமணங்களை ஒப்பந்தங்களைப் போல கலைக்க முடியாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பரஸ்பர சம்மதத்துடன் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து 2007ஆம் ஆண்டு தனது கணவரை விட்டு மனைவி பிரிந்து சென்றார். பிறகு புலந்தஷாரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் 2008ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கணவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான வழக்குகள் நடந்த நிலையில் இந்த விவாகரத்துக்கு ஆரம்பத்தில் மனைவியும் ஒப்புக் கொண்டார். பிறகு தனக்கு இருக்கும் இரு குழந்தைகளின் வாழ்க்கையை எண்ணிய அந்த பெண் , பிறகு விவாகரத்து பெறும் முடிவிலிருந்து மனம் மாறினார். தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கோர்ட்டில் தெரிவித்தார்.
ஆனால் அவருடைய கணவரோ , மனைவியுடன் எக்காரணத்தைக் கொண்டும் சேர்ந்து வாழ முடியாது என தெரிவித்துவிட்டார். எனினும் மனைவியின் பரஸ்பர சம்மதம் இல்லாமல் கடந்த 2011 ஆம் ஆண்டு புலந்தஷாரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றம் விவாகரத்தை கொடுத்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி, தனது சம்மதம் இல்லாமல் ஒருதலைபட்சமாக விவாகரத்து வழங்கப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்ய முடிவு செய்தார். அந்த வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்தார்.
இதுகுறித்து கீழமை நீதிமன்றத்தில் விசாரித்த போது அந்த நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு எழுத்துப்பூர்வமாக மனைவி தாக்கல் செய்த மனுவை அடிப்படையாக வைத்து விவாகரத்து கொடுத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த மனு நீதிபதிகள் சவுமித்ரா தயாள் சிங், டோனாடி ரமேஷ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியிருப்பதாவது: இந்து திருமணங்கள் புனிதமானது. அந்த திருமணங்களை ஏதோ ஒப்பந்தங்களைப் போல கலைக்க முடியாது. கணவன்- மனைவியின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே விவாகரத்து என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதே போல் ஜெயம் ரவியும் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கானது வரும் அக்டோபர் 10ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த விவாகரத்து முடிவை ரவி தன்னிச்சையாக எடுத்தார் என ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார்.
மேலும் தனது கணவரை சந்தித்து மனம் விட்டு பேச முயற்சித்தும் அது நடக்கவில்லை என ஆர்த்தி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அப்படியென்றால் ஆர்த்திக்கு விவாகரத்து பெற விருப்பமில்லை என்றே தெரிகிறது. எனவே அலகாபாத் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு ஜெயம் ரவி தம்பதிக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications