ஏர்பேக் பிரச்சினை: ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை திரும்ப பெறுகிறது ஹோண்டா
டெல்லி: ஏர்பேக் பிரச்சினைகள் இருப்பதாக வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த புகாரை தொடர்ந்து ஹோண்டா நிறுவனம் 1338 கார்களை திரும்ப பெறுகிறது. இதில் 1085 கார்கள் அக்கார்ட் வகையை சேர்ந்தவை, 253 கார்கள் சிஆர்-வி ரக கார்கள்.
ஏர் பேக்குகளில் பிரச்சினை இருப்பதாக வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த புகாரை தொடர்ந்து 1085 அக்கார்ட் கார்களையும், 253 சிஆர்-வி ரக கார்களையும் திரும்ப பெற உள்ளோம் என்று ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இவ்வாண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட கார்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும்.
ஏற்கனவே 20 லட்சம்
2000-2002 இடைப்பட்ட காலத்தில், இதேபோன்ற பிரச்சினைக்காக உலகம் முழுவதிலும், சுமார் 20 லட்சம் கார்களை ஹோண்டா திரும்ப பெற்றது.
திரும்ப பெற்ற கார்கள் அனைத்துமே, இலவசமாக பழுது பார்த்து திருப்பி அளிக்கப்படும் என்று ஹோண்டா அறிவித்துள்ளது. விபத்து போன்ற ஆபத்தான தருணங்களில் சிறப்பாக செயல்பட ஏர்பேக்குகள் தயார்படுத்தப்படும் என்று ஹோண்டா அறிவித்துள்ளது.
ஸ்கார்பியோ
இம்மாதத்தின் தொடக்கத்தில் மகேந்திரா&மகேந்திரா நிறுவனம், 23 ஆயிரம் ஸ்கார்பியோ வகை கார்களை திரும்ப பெற்று, அதில் ஏற்பட்ட வால்வ் பிரச்சினையை சரி செய்து கொடுத்தது.
ஹூண்டாய்
ஹூண்டாய்-இந்தியா நிறுவனம், பெரிய ரக காரான சான்டா ஃபே வகையை சேர்ந்த 2437 கார்களை திரும்ப பெற்று பின்புற விளக்கில் ஏற்பட்டிருந்த கோளாரை நீக்கி கொடுத்தது.
மாருதியும் தப்பவில்லை
கடந்த ஏப்ரல் மாதம், மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 311 கார்களை திரும்ப பெற்றது. இதில் எர்டிகா, ஸ்விப்ட், டிசையர் ரகங்கள் அடங்கும். எரிபொருள் பில்டரின் கழுத்து பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மாருதி இந்த கார்களை திரும்ப பெற்றது.
இன்னோவா, தவேரா
இதேபோல ஸ்டீரிங் சக்கர பகுதியில் ஏற்பட்ட வயர் பிரச்சினைக்காக டொயோட்டோ நிறுவனம் தனது 44,989 இன்னோவா கார்களை திரும்ப பெற்றது. ஜெனரல் மோட்டார்ஸ்-இந்தியா நிறுவனம், 1.14 லட்சம் செர்வலேட் தவேரா கார்களை திரும்ப பெற்றது. அதிகப்படியாக புகை வெளியிட்டதால் இந்த கார்கள் திரும்ப பெறப்பட்டன.