Trisha : சத்தியமாக அரசியலுக்கு வர மாட்டேன்.. ஏனென்றால்! வதந்திகளுக்கு ஓபனாக பதில் அளித்த திரிஷா
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. சினிமா, தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் என எந்த விஷயமாக இருந்தாலும் திரிஷாவை மையமாக வைத்து தினமும் புதிய தகவல்கள் வெளியாகும் நிலையில், அவற்றில் பெரும்பாலானவற்றை அவர் கண்டு கொள்ளாமல் தனது வழக்கமான வாழ்க்கையையும் தொழிலையும் பார்த்து வந்தார். இந்த நிலையில் அரசியல் வருகை குறித்து திரிஷா பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

திரிஷா பற்றிய வதந்தி
சமீபத்தில் பரவியுள்ள மிகப்பெரிய வதந்திகளில் ஒன்று நடிகர் மற்றும் தமிழக அரசியலில் முக்கியஸ்தராக உருவெடுத்துள்ள முதலமைச்சர் விஜய் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததால் அங்கு திரிஷா போட்டியிடுவார் என்பதுதான். அதேபோல், அவர் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற பேச்சுகளும் சமூக வலைதளங்களில் பரவின. இந்த தகவல்கள் எந்த அதிகாரபூர்வ ஆதாரமும் இல்லாமல் பரவியிருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பின.
திரிஷா கொடுத்த விளக்கம்
இந்த சூழ்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் திரிஷா அளித்திருந்த ஒரு பழைய பேட்டி தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், தொகுப்பாளர் திரிஷாவிடம், "நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? குந்தவை கதாபாத்திரத்தில் நீங்கள் அரசியல் நுணுக்கத்துடன் நடித்துள்ளீர்கள். அதனால் உங்களுக்குள் அரசியல் ஆர்வம் இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு திரிஷா மிகத் தெளிவாக, "சத்தியமா அதற்கு வாய்ப்பே இல்லை. நான் அரசியலுக்கு வர மாட்டேன். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. அதில் நான் எதையும் செய்ய முடியாது"
என்று பதிலளித்தார்.
இப்போது பரவி வரும் அனைத்து வதந்திகளுக்கும் இந்த பதில் நேரடியான மறுப்பாகவே ரசிகர்கள் எடுத்துக்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சர் கனவு
இதற்கு முன்னர், ஒரு பேட்டியில் திரிஷா சிரிப்பாக "எனக்கு முதலமைச்சராக வேண்டும் என்று ஆசை" என கூறியிருந்தார். அந்த ஒரு வரியை அடிப்படையாக வைத்து பல ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் அவர் குறித்து மீம்ஸ்களும் ட்ரோல்களும் உருவாகி வந்தன. தற்போது விஜயின் அரசியல் வளர்ச்சியையும் இதனுடன் இணைத்து சிலர் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
திரிஷாவின் சினிமா பயணம்
2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான திரிஷா, மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். தொடர்ந்து கில்லி, திருப்பாச்சி, அபியும் நானும், 96 போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் கொடுத்த வெற்றி
அவரது கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பொன்னியின் செல்வன். இதில் குந்தவை கதாபாத்திரத்தில் அவர் அளித்த நடிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றது. இதன் மூலம் திரிஷா மீண்டும் உச்ச நிலைக்கு வந்தார் என்று கூறலாம்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ள த்ரிஷா, 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இடத்தை நிலைநிறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு
தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் திரிஷாவின் வாழ்க்கையில் பெரும் பேச்சாக இருந்தது. அதன் பிறகு அவர் தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் தனிமையாக வைத்துக் கொண்டு, முழுமையாக தனது சினிமா பயணத்திலேயே கவனம் செலுத்தி வருகிறார்.
அவரது ரசிகர்கள் மட்டும், "இந்த வருடமாவது திரிஷாவுக்கு திருமணம் நடக்க வேண்டும்" என்று தொடர்ந்து ஆசை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வதந்திகளை மீறும் அமைதி
இன்றைய சூழலில், திரிஷா குறித்து எந்த தகவல் வந்தாலும் அது வைரலாகி விடும் நிலை உள்ளது. ஆனால் அவற்றுக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பது தான் அவரது தனித்துவம். அதே நேரத்தில், அவ்வப்போது வெளிவரும் பழைய பேட்டிகள் தான் இப்போது உண்மையான பதில்களாக மாறி, வதந்திகளை தானாகவே உடைத்துக் கொண்டிருக்கின்றன.














Click it and Unblock the Notifications