விலை உயர்வால் பயங்கரம்... 'வெங்காயம்' தர மறுத்த ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக் கொலை!
பாட்னா: பீகார் மாநிலத்தில் இரவு உணவுக்கு வெங்காயம் தர மறுத்ததால் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் பேகுசராய் மாவட்டம் பரோனி ரயில் நிலையம் முன்பாக இருக்கும் லலித் நாரயண் மார்கெட்டில் ஒரு சிறிய ஹோட்டல் நடத்தி வருபவர் ரித்திஷ்குமார் பண்டிட். இவரது ஹோட்டலுக்கு நேற்று இரவு குணால் குமார், விஜய் குமார், சோட்டே லால் மற்றும் தனராஜ் ஆகிய நான்கு பேர் உணவருந்த வந்திருந்தனர்.
அவர்களுக்கு அங்கு வழங்கப்பட்ட உணவுடன் வெறும் எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. வட இந்தியாவில் வழக்கமாக உணவுடன் சேர்த்து அளிக்கப்படும் வெங்காயம் தரப்படவில்லை. இது குறித்து உரிமையாளரிடம் நால்வரும் தட்டிக் கேட்டுள்ளனர்.
வெங்காயம் விற்கும் விலையில் அதை உணவுடன் தொட்டுக் கொள்ள தரமுடியாது என மறுத்துள்ளார் உரிமையாளர்.
இதில் ஆத்திரமடைந்த நான்குபேரில் ஒருவர் திடீரென தம்மிடம் இருந்த கள்ளத்துப்பாக்கியால் ஹோட்டல் உரிமையாளரை சுட்டுப் படுகொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோட்டல் உரிமையாளரை படுகொலை செய்த 4 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்தினர்.
விண்ணைத் தொடும் வெங்காய விலை இப்போது மனித உயிர்களையும் வேட்டையாடத் தொடங்கிவிட்டது!