குடியரசு தலைவர் வேட்பாளர்.. ராம்நாத் கோவிந்த்துக்கு முன்பாக யாரையெல்லாம் பாஜக பரிசீலித்தது தெரியுமா?
டெல்லி: பாஜகவின் குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தலைமை, பல்வேறு பெயர்களை பரிசீலித்து ராம்நாத் கோவிந்த் பெயரை இறுதி செய்துள்ளது. ராம்நாத் கோவிந்த் என்ற பெயர் இதற்கு முன்பு, பரவலாக இந்தியர்களால் அறியப்பட்டிருக்கவில்லை. எனவே இது ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பாகவே இருந்தது.
பாஜக நாடாளுமன்ற குழு கூடிதான் குடியரசு தலைவர் வேட்பாளரை தேர்வு செய்தது. அப்போது பல்வேறு பெயர்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.
மூத்த அமைச்சர்கள்
ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், டி.சி.கெலாட் ஆகியோர் பெயர்களும் பரிசீலனைக்கு எடுக்கப்பட தவறவில்லை. ஆனால், பிரதமர் மோடியோ தனது அமைச்சரவை திறமைசாலிகளால் பலமானதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். எனவே உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை குடியரசு தலைவராக்கும் எண்ணத்திலிருந்து பாஜக நாடாளுமன்ற குழு பின்வாங்கிவிட்டது.
பலமான அமைச்சரவை தேவை
ராஜ்நாத்சிங்கையோ, சுஷ்மாவையோ குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்பினால் அவர்கள் இடத்தை வேறு யாரை கொண்டும் நிரப்ப முடியாது என்பது மோடி எண்ணம். தனது அமைச்சரவை டீம் திறமை குறைந்துவிடும் என மோடி கருதியுள்ளார். ஏற்கனவே பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை கோவா முதல்வராக்கிவிட்டதால் அமைச்சரவை தடுமாற்றமடைந்ததை மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்வானி பெயரும்
லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பெயரும், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் மற்றும் அத்வானி பெயர்களும் பரிசீலிக்கப்பட்டுள்ளன. ஆனால் பிந்தைய இரு தலைவர்கள் மீதும் பாபர் மசூதி இடிப்பு வழக்கு நிலுவையில் இருப்பதால் அதை தவிர்த்துவிட்டனர். சுமித்ரா மகாஜன் லோக்சபா சபாநாயகராக சிறப்பாக செயல்படுவதால் அவரையும் இழக்க பாஜக தயாராக இல்லை.
ஒருவழியாக ராம்நாத்
ஜார்கண்ட் ஆளுந்ர திருபாடி முர்மு மற்றும் லோக்சபா துணை சபாநாயகர் கரியா முண்டா ஆகியோர் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அமித்ஷாவோ, உ.பி.ஆளுநர் ராம் நாயக் பெயரை முன் மொழிந்துள்ளார். ஆனால், தலித் தலைவர் என்ற வகையில் கோவிந்த் அந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.