குஜராத் பாலம் அறுந்தது எப்படி?.. டிக்கெட் விற்பதிலேயே அதிகாரிகள் குறி.. நேரில் பார்த்தவர் பகீர்
அகமதாபாத்: குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 130-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கேபிள் பாலம் விபத்தில் உயிர் தப்பியவர்கள் கேபிள் பாலம் எப்படி அறுந்து விழுந்தது என்பது குறித்து பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு இருந்த தொங்கு பாலம் (கேபிள் பாலம்) நேற்று அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் பாலத்தில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆற்றில் விழுந்து உயிருக்கு தவித்தனர்.

130-க்கும் மேற்பட்டோர் பலி
பலர் நீந்தி கரைகளுக்கு வந்து விட்டனர். எனினும், இந்த கோர விபத்தில் இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இந்த பயங்கர விபத்து ஒட்டு மொத்த தேசத்தையும் அதிரவைத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு விபத்து குறித்து தேசிய ஊடகங்கள் முதல் அனைத்து பிராந்திய ஊடகங்களிலும் தலைப்பு செய்திகளாக வெளியாகின.

நேரில் பார்த்தவர் பேச்சு
சமூக வலைத்தளங்களில் இந்த விபத்து குறித்து பலரும் அதிர்ச்சியை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இத்தனைக்கும் பாலம் சீரமைக்கும் பணிகள் முடிந்து சில நாட்களில் இந்த கோர விபத்து நடைபெற்றதுதான் பெரும் துயரம். இந்த விபத்து குறித்து பல்வேறு புதுப்புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த பாலம் அறுந்து விழுந்தது தொடர்பாக நேரில் பார்த்த விஜய் கோஸ்வாமி என்பவர் பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அகமதாபாத்தை சேர்ந்த விஜய் கோஸ்வாமி கூறியதாவது:-

வேண்டும் என்றே பாலத்தை இழுத்து அசைத்தனர்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் எனது குடும்பத்தினருடன் மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலத்திற்கு சென்றேன். பாலத்தில் சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் சிலர் வேண்டும் என்றே பாலத்தை பிடித்து இழுத்து அசைத்தனர். இதனால், பாலத்தில் நடந்து செல்ல மிகவும் சிரமமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் பக்கவாட்டில் எதையும் பிடிக்காமல் பாலத்தில் நிற்க முடியாத அளவுக்கு பாலத்தை இளைஞர்கள் குலுக்கினர்.

டிக்கெட்டுகள் விற்பதில் மட்டுமே குறி
இதனால் எதுவும் விபரீதம் நடந்து விடும் என்ற அச்சத்தில் நான் எனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு நடுவழியிலேயே திரும்பி விட்டேன். ஆனால், அச்சப்பட்டது போலவே பெரும் விபத்து நடைபெற்றுவிட்டது. விபத்துக்கு முன்பாக இது குறித்து அதிகாரிகளிடமும் நான் எச்சரித்தேன். ஆனால் டிக்கெட்டுகள் விற்பதில் மட்டுமே குறியாக இருந்த அதிகாரிகள் நான் கூறிய தகவலை காதில் போட்டுக்கொள்ளாமல் அலட்சியம் செய்தனர்.

இணையத்தில் பரவும் வீடியோ
பாலத்தில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் பாலத்தில் இருந்து திரும்பிய சில மணி நேரத்தில் இந்த பெரும் துயரம் நடந்து விட்டது" என்றார். இதற்கிடையே, பாலத்தின் கயிறை இளைஞர்கள் சில எட்டி உதைப்பதும் பாலத்தை பிடித்து ஆட்டும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications