பாக். இதை எதிர்பார்க்கவே இல்லை! வெறும் 15 நாளில் ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது எப்படி? டைம்லைன்
டெல்லி: கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சரியாக 15 நாட்களில் இந்தியா இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்துள்ளது. இந்த 15 நாட்களில் என்ன நடந்தது.. மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த டைம்லைனை பார்க்கலாம்.
காஷ்மீரில் கடந்த மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா இன்று பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரில் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் புகலிடங்களை மையமாக வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல் நடந்து 15 நாட்களில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்த இடைப்பட்ட நாட்களில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த டைம்லைனை பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதல்
ஏப்ரல் 22: காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் 26 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த போது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தாக்குதலின் போது சவுதி சென்றிருந்த பிரதமர் மோடி, உடனடியாகத் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அன்றைய தினமே காஷ்மீருக்கு விரைந்தார். ஜம்மு-காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வர் உமர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்தினார்.
ஏப்ரல் 23: பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் நடவடிக்கையாக, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. மேலும், அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை மூடியது. மேலும், பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ஊழியர்கள் குறைக்கப்பட்ட நிலையில், அவர்களும் வெளியேற உத்தரவிடப்பட்டது.
பிரதமர் மோடி உறுதி
ஏப்ரல் 24: பீகாரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தாக்குதல் நடத்திய ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களுக்குப் பின்னணியில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு, தண்டிக்கும் என உறுதியளித்தார். அவர் பேசுகையில், "கார்கில் முதல் கன்னியாகுமரி வரை, துக்கமும் ஆத்திரமும் நிலவுகிறது. இந்தத் தாக்குதல் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் மட்டுமல்ல; இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல். இதற்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்" என்றார்.
ஏப்ரல் 25: பஹல்காம் சம்பவம் குறித்தும், இந்தியா இதற்கு எப்படி பதிலடி தரத் தயாராகி வருகிறது என்பது குறித்தும் விளக்கமளிக்க மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இதில் 15 அரசியல் கட்சிகள் பங்கேற்ற நிலையில், அதில் மத்திய அரசு விளக்கமளித்தது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவை அளிப்பதாக உறுதியளித்தனர்.
உயர்மட்ட ஆலோசனை
ஏப்ரல் 29: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் ஆகியோருடன் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்தச் சந்திப்பில் தான் பதிலடி எப்படி எங்கே கொடுக்கலாம் என்பது குறித்து அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் மோடி முழுச் சுதந்திரம் அளித்தார்.
மே 5: நாடு முழுக்க மே 7ம் தேதி போர்ப் பயிற்சி ஒத்திகையை நடத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. எச்சரிக்கை சைரன்கள், பிளாக் அவுட், டிரில் என விரிவான போர்ப் பயிற்சி அளிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவில் பஹல்காம் தாக்குதல் குறித்து எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.
ஐநா
மே 6: பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இந்தியா பாகிஸ்தான் நிலைமை குறித்து ஆலோசனை நடத்தியது. பதற்றத்தைத் தணிக்க ஐநா பிரதிநிதிகள் அழைப்பு விடுத்தனர். இந்தக் கூட்டத்தில் ஐநா பிரதிநிதிகள் பாகிஸ்தானிடம் கடுமையான கேள்விகளைக் கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா பதிலடி
மே 7: அதிகாலை 1.05 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது இடங்களில் இந்திய ராணுவம் துல்லியமான தாக்குதலை நடத்தியது. மொத்தம் 24 துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களை இந்தியா நடத்தியது. இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. இருப்பினும், 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. மேலும், இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ இலக்குகள் எதுவும் குறிவைக்கப்படவில்லை. மேலும், பொதுமக்களும் உயிரிழக்கவில்லை.












Click it and Unblock the Notifications