நான் ருத்ராட்சம் அணிபவன்.. வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளேன்.. நீதிபதியிடம் சொன்ன சஞ்சய் ராய்!
கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் படுகொலை வழக்கில், தான் சிக்க வைக்கப்பட்டிருப்பதாக குற்றவாளியான சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார். ருத்ராட்சம் அணியும் வழக்கம் இருப்பதால், அந்த குற்றத்தை செய்திருந்தால் ருத்ராட்சம் சம்பவ இடத்திலேயே உடைந்திருக்கும் என்று கூறிய சஞ்சய் ராய், இதுபோன்ற குற்றத்தை என்னால் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு கொல்கத்தா பகுதியில் ஆர்ஜி கர் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செமினார் ஹாலில் ரத்த வெள்ளத்தில் மருத்துவரின் உடல் கிடந்தது. பயிற்சி மருத்துவர் ரத்தக் காயங்களுடன் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆகஸ்ட் 10ஆம் தேதி சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இருப்பினும் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன்பின் கொல்கத்தா உயர்நீதிமன்றம் தலையிட்டு, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் கடந்த ஆண்டு அக்.7ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சியல்டா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
அதேபோல் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தொடர்ச்சியாக 162 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டன. அதில் 120க்கும் அதிகமான சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் விசாரணை கடந்த 9ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று நீதிபதி அனீர்பான் தாஸ் தீர்ப்பளித்துள்ளார். அதில் குற்றம்சாட்டப்பட்டு கைதான சஞ்சய் ராய் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு பின் குற்றவாளியான சஞ்சய் ராய் நீதிமன்றத்திலேயே விரக்தியை வெளிப்படுத்தினார். இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறிய சஞ்சய் ராய், இந்த தப்பை நான் செய்யவில்லை. உண்மையான குற்றவாளிகள் ஏன் தப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்? நான் எப்போது கழுத்தில் ருத்ராட்சம் அணிபவன். ஒருவேளை நான் குற்றம் செய்திருந்தால், என் ருத்ராட்சம் அந்த இடத்திலேயே வெடித்திருக்கும்.
இதுபோன்ற குற்றத்தை என்னால் செய்ய முடியாது என்று தெரிவித்தார். அப்போது நீதிபதி, திங்கட்கிழமை தண்டனை அறிவிப்பதற்கு முன்பாக உங்களின் கருத்துகள் கேட்கப்படும். இப்போது நீங்கள் நீதிமன்றக் காவலுக்கு கொண்டு செல்லப்படுவீர்கள். திங்கட்கிழமை இந்த வழக்கின் விசாரணையை மதியம் 12.30 மணிக்கு நேரம் குறித்துள்ளேன். அப்போது உங்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications