சங்கராந்தி கொண்டாட வந்துடுவேன்..தந்தையிடம் கூறிய சில நிமிடத்தில் பலியான ஏர் ஹோஸ்டஸ்..உருக்கமான தகவல்
காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த 15 ஆம் தேதி பொகாரா நகரத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 72 பேரும் பலியாகினர். விமானத்தில் ஏர் ஹோஸ்டசாக பணியாற்றிய பெண் ஜாலியாக டிக் டாக் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வரும் நிலையில், விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாகத்தான் தனது தந்தையிடம் அந்த பெண் சங்கராந்தி கொண்டாட வந்து விடுவேன் என கூறியிருக்கிறார். இது தொடர்பான உருக்கமான தகவலகள் வெளியாகியுள்ளது.
இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நாடு நேபாளம். இந்த நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக பொகாரா நகரம் உள்ளது.
இந்த பொகாரா நகரத்திற்கு தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள் மற்றும் 4 விமான சிப்பந்திகள் என மொத்தம் 72 பேருடன் யெட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏடிஆர்-72 ரக விமானம் வந்து கொண்டிருந்தது.

பயணம் செய்த அனைவரும் உயிரிழப்பு
இந்த விமானம், கடந்த ஞாயிற்றுக்கிழமை பொகாரா நகரில் தரையிறங்க முயற்சித்தபோது அங்குள்ள ஆற்றின் கரையில் மோதி தீப்பிடித்து விபத்து நேரிட்டது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். இதுவரை 71 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாள நாட்டின் வரலாற்றில் 30 ஆண்டுகளில் இது மிக மோசமான விபத்து ஆகும். இந்த விமான விபத்தில் 5 பேர் இந்தியர்கள் உள்பட 15 வெளிநாட்டவர்களும் பயணம் செய்தனர்.

பேஸ்புக்கில் லைவ் ஸ்டிரீம்
நேபாளத்தை உலுக்கிய இந்த விமான விபத்து தொடர்பாக விசாரிக்க விசாரணை குழுவையும் நேபாள அரசு அமைத்துள்ளது. 45 நாளில் விசாரணை அறிக்கை அளிக்கப்படலாம் எனத்தெரிகிறது. இதற்கிடையே விபத்து நடைபெற்ற போது பயணி ஒருவர் பேஸ்புக்கில் லைவ் ஸ்டிரீம் செய்து கொண்டிருந்தார். வரப்போகும் ஆபத்தை அறியாமல் அவர் பேஸ்புக்கில் லைவ் செய்த பதிவுகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கடைசி சில வினாடிகள்
பயணி லைவ் ஸ்டீரீம் செய்து கொண்டிருந்தபோதே யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென ஒரு வெடிப்பு ஏற்படுகிறது. அப்போது மொபைல் பயணியின் கைகளில் இருந்து கீழே விழுந்துவிடுவதால், எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், அந்த வீடியோவில் கடைசி சில வினாடிகள் ஜன்னலுக்கு வெளியே ஏற்படும் பயங்கர தீ மற்றும் பயணிகளின் அலறல் சத்தமும் தெளிவாக கேட்டது.

கண்டிப்பாக வந்து விடுவேன்
இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த ஏர் ஹோஸ்ட்ஸ் ஒருவர் டிக் டாக்கில் பதிவு செய்து இருந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது. ஓஷின் அலே மாகர் என்ற அந்த ஏர் ஹோஸ்டஸ் மகர சங்கராந்தியை கொண்டாடுவதற்காக கண்டிப்பாக வந்து விடுவேன் என பெற்றோரிடம் கூறிவிட்டு சென்று இருக்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக விமானம் விபத்தில் சிக்கியதில் இவரும் உயிரிழந்தார்.

வேலைக்கு செல்ல வேண்டாம்
விபத்துக்கு சற்று நேரத்திற்கு முன்பாக ஏர் ஹோஸ்டஸ் ஜாலியாக டிக் டாக் செய்து பதிவிட்ட வீடியோ என இணையத்தில் பரப்பப்பட்டது.ஆனால், உண்மையில் இந்த வீடியோவை கடந்த செப்டம்பர் மாதம் விமானத்தில் வைத்து ஓஷின் அலே மாகர் எடுத்து இருக்கிறார். அப்போதே தனது டிக் டாக்கிலும் பகிர்ந்து இருக்கிறார். நேபாளத்தில் உள்ள ஏர் ஹோஸ்டஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற ஓஷின் அலே மாகர் கடந்த இரண்டு வருடங்களாக யெட்டி விமான நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டசாக பணிபுரிந்து வந்துள்ளார். விபத்து நடந்த தினத்தில் ஓஷினை வேலைக்கு செல்ல வேண்டாம் என அவரது தந்தை அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் பணியை சீக்கிரம் முடித்து விட்டு பண்டிகையை கொண்டாட வந்துவிடுவேன் என தந்தையிடம் கூறியிருக்கிறார். ஆனால் பரிதாபமாக விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications