எனக்கோ, மனைவிக்கோ இந்தியாவை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை: ஆமீர்கான் பல்டி
மும்பை: சகிப்புத்தன்மை குறித்த சர்ச்சை பெரிதாகியுள்ள நிலையில், இந்தியராக இருப்பதில் பெருமை கொள்வதாகவும், தனக்கோ தனது மனைவிக்கோ இந்தியாவைவிட்டு வெளியேறும் எண்ண் இல்லை என்றும் நடிகர் ஆமீர்கான் தெரிவித்துள்ளார்.
சகிப்புத்தன்மையில்லா செயல்கள் இந்தியாவில் அரங்கேறுவதால், நாட்டை விட்டு வெளியேற தனது மனைவி விரும்பியதாக நடிகர் ஆமீர்கான் கூறியிருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து சமூக தளங்களில் கருத்து பதிவு செய்தனர்.
ஆமீர்கான் விளம்பர தூதராக உள்ள ஸ்நாப்டீல் நிறுவனத்தின், அப்ளிகேஷன்களை டெலிட் செய்து நூதன எதிர்ப்பை சுமார் 1 லட்சம் நெட்டிசன்கள் காண்பித்தனர். இந்த பேச்சுக்காக அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆமீர்கான் இன்று வெளியிட்ட அறிக்கை: நான் என்ன கூறினேனோ அதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால், என்னை யாரெல்லாம், தேசத்துக்கு எதிரானவன் என அழைத்தார்களோ, அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம், 'நான் பெருமைமிகு இந்தியன்' என்பதே.
நானோ எனது மனைவியோ, இந்தியாவைவிட்டு வெளியேறும் எண்ணத்தில் இல்லை. ஆனால், என்னை பார்த்து, தப்பாக பேசியவர்கள், நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்பதை நிரூபித்துவிட்டார்கள். இவ்வாறு ஆமீர்கான் தெரிவித்துள்ளார்.