அமைச்சர் பதவி கிடைக்குமா? ஒரு தகவலும் இல்லையே..: சொல்வது அன்புமணி
டெல்லி: நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்பது பற்றி தங்களுக்கு எந்த ஒரு தகவலும் இல்லை விரக்தியாக பதிலளித்துள்ளார் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ்.
டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது:
தமிழகத்திலிருந்து 2 உறுப்பினர்கள்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வென்றுள்ளனர். தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும், தமிழ்நாட்டுக்குத் தேவையான முன்னேற்றத்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இருக்கிறது.

யார் அமைச்சராவது என்பதை பிரதமராகும் நரேந்திர மோடிதான் முடிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் இந்த பிரச்சினை குறித்து நரேந்திர மோடியிடமோ அல்லது பாஜக தலைவர்களிடமோ வலியுறுத்தவில்லை. அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதை வரவேற்போம். கூட்டணிக் கட்சிகளை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் எங்களுக்கும் வரவில்லை.
இந்த தேர்தலில் நாடெங்கும் வீசியது மோடி அலை. தமிழகத்திலோ அதிமுகவின் பண அலை வீசியது. பணத்தை வைத்தும், அதிகாரிகளை வைத்தும் தேர்தல் ஆணையத்தை வைத்தும் இந்த வெற்றியை அதிமுக பெற்றிருக்கிறது.
ஆனால் திமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இது ஒரு வரலாறு என்று கூறிய. மக்கள் திமுகவை ஓரங்கட்டிவிட்டார்கள். அடுத்த தேர்தலில் அதிமுகவையும் அவர்கள் ஓரங்கட்டுவார்கள்.
இவ்வாறு அன்புமணி கூறினார்.












Click it and Unblock the Notifications