"செருப்பாலேயே அடிப்பேன்.." மேடையில் கொதித்த நடிகர் பவன் கல்யாண்.. அதிர்ந்து பார்த்த ஆந்திரா
அமராவதி: பாஜகவின் பி டீம்.. பாஜகவிடம் இருந்து பணம் வாங்கி கட்சி நடத்துவதாக கூறினால் செருப்பாலேயே அடிப்பேன் என ஆந்திராவில் நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் ஆக்ரோஷமாக பேசியதோடு, காலில் இருந்த செருப்பை கழற்றி எச்சரிக்கை விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவை பொறுத்தமட்டில் அங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார்.
இங்கு ராயலசீமா, கடலோர ஆந்திரா, வட ஆந்திரா ஆகிய மூன்று பகுதிகளுக்கும் சம வளர்ச்சி அளிக்கும் விதமாக மூன்று தலைநகர்களை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

வார்த்தை போர்
ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் கட்சி துவங்கி நடத்தி வருகிறார். இவர் ஜனசேனா என்ற பெயரில் கட்சியை துவங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார். சமீப காலமாக ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினருக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.

ரோஜாவின் கார் மீது தாக்குதல்
இந்நிலையில் தான் ஆந்திராவுக்கு 3 தலைநகர் அமைக்கும் கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது. இதனை வலியுறுத்தி ‛விசாக கர்ஜனை' என்ற பெயரில் விசாகப்பட்டினத்தில் பிரமாண்டமான பேரணி பல்வேறு தரப்பினர் சார்பில் நடத்தப்ட்டது. இதில் பங்கேற்க வந்தபோது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரும் நடிகையுமான ரோஜாவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது உதவியாளர் காயமடைந்தார். இந்த தாக்குதலை பவன் கல்யாண் கட்சியை சேர்ந்தவர்கள் நடத்தினர். இதுதொடர்பாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாஜகவின் பி டீம் என விமர்சனம்
தற்போது இருகட்சியினர் இடையேயான வார்த்தை போர் இன்னும் உச்சத்துக்கு சென்றுள்ளது. குறிப்பாக பாஜகவிடம் இருந்து பணம் பெற்று கொண்டு பவன் கல்யாண் கட்சியை நடத்தி வருகிறார். இவர் பாஜகவின் பி டீம் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், குண்டூர் அருகே மங்களகிரியில் உள்ள தனது கட்சி தலைமை அலுவலகத்தில் பவன் கல்யாண் பேசினார்.

செருப்பால் அடிப்பேன்
அப்போது அவர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி தன்னை விமர்சனம் செய்யும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரை தாக்கி பேசினார். மேலும் திடீரென தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி உயர்த்தி காட்டிய பவன் கல்யாண், ‛‛பேக்கேஜிங் ஸ்டார்.. பிற கட்சிகளிடம் இருந்து பணம் வாங்கி கட்சி நடத்துகிறேன் என என்னை இனி சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன். எனது பொறுமையின் காரணமாக தான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குண்டர்களே இன்னும் இருக்கிறீர்கள்'' என ஆவேசமாக பேசினார். தற்போது இந்த வீடியா வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications