பிரிட்ஜோவை கொன்றது யார்? ராஜ்யசபாவில் கனிமொழி நறுக் கேள்வி
இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று கூறுகிறது. அவர்கள் சுடவில்லை என்றால், வேறு யார் கொன்றார்கள் என மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பினார்.
டெல்லி: ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவை, இலங்கை கடற்படை சுட்டுக்கொல்லாவிட்டால், யார் சுட்டுக்கொன்றது என திமுக மாநிலங்களைவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினார்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். பிரிட்ஜோவின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரையில் போராடுவோம் எனக் கூறி, தங்கச்சிமடத்தில் நான்காவது நாளாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று, பிரிட்ஜோ கொலை குறித்து, மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார். அப்போது அவர், பிரிட்ஜோவை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்லவில்லை என்றால் வேறு யார் சுட்டுக் கொன்றது? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழகத்தில் பிரிட்ஜோவின் கொலை மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகி வருகிறது. ஆனால் இதுகுறித்துப் பேச மாநிலங்களைவையில் மூன்று நிமிடங்கள் மட்டுமே நேரம் ஒதுக்கினால் எப்படி விவாதிக்க முடியும்? இலங்கை கடற்படை தொடர்ந்து இதேபோல் நடந்துகொள்கிறது. மத்திய அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் கூறினார்.