டெல்லியில் பயங்கரம்... ரூ.22.5 கோடி ஏடிஎம் பணத்துடன் தப்பியோடிய டிரைவர்.. கைது
டெல்லி: டெல்லியில் கோவிந்தபுரி என்ற இடத்தில் ஏடிஎம் மெஷினில் பணம் போட வந்த டிரைவர், ரூ. 22.5 கோடி பணத்துடன் தப்பியோடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தற்போது டிரைவரை போலீஸார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கைது செய்து விட்டனர்.
பாதுகாவலர்கள் புடை சூழ கோவிந்தபுரி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே அந்த வேன் வந்தபோது பாதுகாவலர்கள் சிறுநீர் கழிப்பதற்காக வேனை நிறுத்தியுள்ளனர். அதைப் பயன்படுத்தி வேனுடன் தப்பி விட்டார் டிரைவர் பிரதீப் சுக்லா.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர்கள் உடனடியாக அந்தப் பணத்தை அனுப்பி வைத்த தனியார் வங்கியின் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் போலீஸாரை உஷார்படுத்தினர்.
இதையடுத்து போலீஸார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த தீவிர வேட்டையில் சுக்லா சிக்கினா். அவரைக் கைது செய்த போலீஸார் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பிரதீப் சுக்லா இருந்த வேனில் ரூ. 22.5 கோடி பணத்தை ஏடிஎம் மெஷினில் போடுவதற்காக அந்தத் தனியார் வங்கி நிர்வாகம் அனுப்பியிருந்தது.