கடவுளே, கொஞ்சம் கருணை மழையை அனுப்புப்பா: கர்நாடக மக்கள் கண்ணீர் பிரார்த்தனை
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் மழை பொய்த்துவிட்டதால் இந்த ஆண்டு கோடை காலம் கொடூரமாக உள்ளது. இதனால் நொந்து போயுள்ள மக்கள் மழையை அனுப்பு இறைவனே என மனமார பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் மழை பொய்த்துவிட்டதால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடாக உள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் மக்கள் டேங்கர் லாரிகளில் வரும் நீரை தான் நம்பியுள்ளனர். கால்வாய்கள், ஆறுகள் வேகமாக வற்றி வருகின்றன.
சுருக்கமாகச் சொன்னால் அடுத்த இரண்டு வாரங்களில் மழை பெய்யாவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.

பஞ்சம்
உத்தர கன்னடா பகுதியில் உள்ள 196 கிராமங்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் இல்லாததால் 25 ஆயிரம் ஹெக்டேரில் விளைந்த நெற்பயிற்கள் கருகியுள்ளன. நிலத்தடி நீரும் வேகமாக குறைந்து வருவதால் மக்கள் மற்றும் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

விவசாயிகள்
விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மாநில அரசு ரூ.9.20 கோடி இழப்பீடு அளித்துள்ளது. மேலும் குடிநீர் கிடைக்கவும் அரசு வழிவகை செய்துள்ளது. கல்பர்கி மாவட்டத்தில் உள்ள 314 கிராமங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடாக உள்ளது. அதில் சுமார் 100 கிராமங்களுக்கு டேங்கர் லாரிகளில் தான் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

மோசம்
மாநிலத்தின் நிலைமை மோசமாக உள்ளது என்று வயதானவர்கள் தெரிவித்துள்ளனர். குழாய்களில் தண்ணீர் வராதா என எதிர்பார்த்து பெண்களும், குழந்தைகளும் காத்திருப்பதை பார்க்க பரிதாபமாக உள்ளது.

கிராமங்கள்
கிராமங்களில் தண்ணீர் பஞ்சமாக உள்ளதால் மக்கள் ஊரை காலி செய்துவிட்டு வெளியே செல்கிறார்கள். தண்ணீர் பிரச்சனை தீரட்டும் அதன் பிறகு ஊர் திரும்புகிறோம் என்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் கிராமங்கள் காலியாகிவிடும்.

தண்ணீர்
சித்ரதுர்கா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாகவே தண்ணீர் பிரச்சனையாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு நிலைமை மோசமாக உள்ளது. நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. மக்களுடன் சேர்ந்து மாவட்ட நிர்வாகமும் மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை செய்து வருகிறது. பல்வேறு கிராமங்களில் மக்கள் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அவர்களின் பிரார்த்தனை நிறைவேறுமா?












Click it and Unblock the Notifications