நாயுடுவிடமிருந்து 'காப்பாற்ற'க் கோரி மோடியை நாடி டெல்லிக்கு ஓடிய ஜெகன் மோகன் ரெட்டி!
டெல்லி: நரேந்திர மோடி அரசுக்கு தனிப்பெரும்பான்மை பலம் உள்ளதால் யாருடைய ஆதரவும் அவருக்குத் தேவையில்லை. இருப்பினும் நாங்கள் மோடி அரசுக்கு பிரச்சினை அடிப்படையில் ஆதரவு தருவோம் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார் ரெட்டி. சீமாந்திராவில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள ரெட்டி, மோடியைச் சந்திக்க வந்துள்ளார். சந்திப்பு குறித்து அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், எங்களது மாநிலம் தொடர்பாக மோடியிடம் பேச வந்துள்ளேன். எங்களது நிலைக்கு அவர் பரிவுடன் கவனம் காட்டுவார் என்று நம்புகிறேன்.
மோடிக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை. இருப்பினும் நாங்கள் பிரச்சினை அடிப்படையில் மோடி அரசுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்றார் ரெட்டி.
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து சீமாந்திரா என்றும், தெலுங்கானா என்றும் பிரித்துள்ளனர். அடுத்த மாதம் இது அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் மாநிலப் பிரிவினைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த கட்சிகளில் ஒன்றுதான் ரெட்டி கட்சி. மாநிலப் பிரிவினை தொடர்பாக தங்களது பகுதி மக்களின் கவலைகளை மோடியிடம் தெரிவிக்கவே தற்போது டெல்லி வந்துள்ளார் மோடி.
நாயுடுவை கட்டி வைக்க கோரவே...!
இருப்பினும் ரெட்டியின் வருகைக்கு வேறு ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது சீமாந்திராவில் தற்போது சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்துள்ளார். அவர் முதல்வராகப் போகிறார். நாயுடு, பாஜகவின் கூட்டாளி ஆவார்.
ஆட்சியைப் பிடித்துள்ள நாயுடு, தன் மீதும் தனது கட்சியினர் மீதும் பழிவாங்கும் நடவடிக்கை, பொய் வழக்குகளைப் போடுவது போன்ற காரியங்களில் ஈடுபடாமல் பாஜக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மோடியிடம் கோரி்கைக வைக்கவே ரெட்டி வந்துள்ளதாக சொல்கிறார்கள்.
காத்திருக்கும் செல்...!
ரெட்டியின் இந்தக் கவலைக்கும் ஒரு நியாயம் உள்ளது. காரணம், சமீபத்தில் நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் சமீபத்தில் சிறை அறை காத்திருக்கிறது.. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி ஊழல் வழக்குகள், சொத்துக் குவிப்பு வழக்குகளின் விசாரணை துரிதப்படுத்தப்படும். 45 நாட்களில் ஜெகன்மோகன் ரெட்டி சிறைக்கு அனுப்பப்படுவார் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் இதற்கு நாயுடு விளக்கம் அளிக்கையில் சட்டம் தனது கடமையைச் செய்யும். அதில் நாங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். எனக்கு யார் மீதும் தனிப்பட்ட முறையில் எந்த பகையும் இல்லை என்று கூறியிருந்தார். ஆனாலும் ரெட்டிக்கு, நாயுடு மீது பலத்த சந்தேகமும், பயமும் உள்ளதால்தான் மோடியை நம்பி ஓடி வந்துள்ளார் என்கிறார்கள்.
சீமாந்திரா சட்டசபையில் நாயுடு முதல்வராகவும், ரெட்டி எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.