சுப்பிரமணியம் சாமிக்குப் போய் நிதியமைச்சர் பதவியைக் கொடுப்பாரா மோடி..?!
டெல்லி: நரேந்திர மோடி நாட்டின் 15வது பிரதமராக மே 26ம் தேதி பதவியேற்கவுள்ளார். அவருடன் அமைச்சர்களாகப் பதவியேற்கப் போவது யார் என்பது குறித்துத்தான் தற்போது பரபரப்பாக உள்ளது.
10 வருடத்திற்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. அதுவும் முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் மோடி பிரதமர் என்பதால் எதிர்பார்ப்பு கூடுதலாகவே உள்ளது.
இந்த நிலையில் மோடி அமைச்சரவையில் யார் யாரெல்லாம் இடம் பெறப் போகிறார்கள் என்பதுதான் அனைவரின் ஆர்வமாகவும் உள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் அடிபடும் பேச்சுக்கள், எதிர்பார்ப்புகள், ஆதரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் யாரெல்லாம் எந்தப் பதவிக்கு வர வாய்ப்புள்ளது என்பது குறித்து 'சிம்ப்ளிபை 360 டிகிரி' நடத்திய ஒரு ஆய்வு ரவுண்ட் அப்...

நிதியமைச்சர் - அருண் ஜேட்லி
தேர்தலில் தோற்றாலும் கூட அருண் ஜேட்லிக்கு நல்ல மரியாதை இன்னும் இருக்கிறது. அவர்தான் அடுத்த நிதியமைச்சராக வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். அதாவது 74 சதவீதம் பேரின் ஆதரவு ஜேட்லிக்குக் கிடைத்துள்ளது. 2வது இடத்தில் சுப்பிரமணியம் சாமியும், 3வது இடத்தில் அருண் ஷோரியும் இருக்கிறார்கள்.

சாமிக்கு சான்ஸே இல்லை
சுப்பிரமணியம் சாமிக்கு டிவிட்டர், பேஸ் புக் மூலமாக அவரது அடிவருடிகள் பலர் ஆதரவு திரட்டி வந்தாலும் கூட நிதியமைச்சர் போன்ற மிகப் பெரிய பதவி அவருக்கு கிடைக்கும் என்பது சந்தேகம்தான். மேலும் அவருக்கு 75 வயதுக்கு மேலாகி விட்டதால் நிச்சயம் வாய்ப்பில்லை என்று நம்பப்படுகிறது.

உள்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்
உள்துறை அமைச்சர் பொறுப்புக்கு சுஷ்மா, அமீத் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரது பெயர்கள் முதன்மையாக வலம் வருகின்றன. இதில் சுஷ்மா முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2வது இடத்தில் அமீத் ஷாவும், 3வது இடத்தில் ராஜ்நாத் சிங்கும் உள்ளனர். ஆனால் அமீத் ஷாவுக்கு இப்பதவி கிடைக்க வாய்ப்பே இல்லை. சுஷ்மாவுக்கும் இது கிடைக்காது என்றே கருதப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சர் வி.கே.சிங்
பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு முன்னாள் தலைமை ராணுவத் தளபதி வி.கே.சிங்குக்கே 52 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. 2வது இடத்தில் ராஜ்நாத் சிங் வருகிறார்.

வெளியுறவு - ஜேட்லி அல்லது சுஷ்மா
வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்புக்கும் ஜேட்லியே பொருத்தமானவர் என்பது பலரின் கருத்தாகும். அதாவது 47 சதவீதம் பேர் ஜேட்லிக்கு ஆதரவாக உள்ளனர். 45 சதவீதம் பேரின் ஆதரவு சுஷ்மாவுக்குக் கிடைத்துள்ளது.

சட்டத்திற்கும் ஜேட்லியே
அதேபோல சட்ட அமைச்சர் பொறுப்புக்கும் ஜேட்லிக்கே ஆதரவு அதிகம். அதாவது 66 சதவீதம் பேர் ஜேட்லியை ஆதரிக்கிறார்கள். 13 சதவீத ஆதரவு ரவி சங்கர் பிரசாத்துக்குக் கிடைத்துள்ளது.

ட்ரீம் கேபினட்
ட்ரீம்கேபினட் என்ற பெயரில் டிவிட்டர் மூலம் 4000 பேரின் கருத்துக்களைத் திரட்டி இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. மே 16 முதல் 19ம் தேதி வரையில் இது நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications