நடு இரவில்.. மனைவியை கள்ளகாதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்.. காரணத்தை கேட்டா அசந்துடுவீங்க!
அகர்தலா: திரிபுராவில் கள்ளக்காதல் சந்தேகத்தால் மனைவியை தாக்கிய நபர், அவரது கள்ளக்காதலன் எனக்கூறி இன்னொரு நபருடன் கட்டாய திருமணம் செய்து வைத்தார். இதுகுறித்த புகாரில் அந்த பெண்ணின் கணவர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திரிபுரா மாநிலம் கோவாய் மாவட்டம் தெலியமுரா போலீஸ் எல்லைக்குட்பட் பகுதியில் மத்திய கிருஷ்ணாபூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ரமேஷ்-ராணி(இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) தம்பதி வசித்து வருகின்றனர்.
திருமணமான புதிதில் இந்த தம்பதி இல்லற வாழ்க்கையை இனிமையாக துவங்கினர். இந்நிலையில் சமீப காலமாக மனைவி ராணியின் நடத்தையில் ரமேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கடும் பசியுடன் டிபன் சாப்பிட உட்கார்ந்த கணவன்.. கிச்சடியில் உப்பு அதிகமானதால் ஆத்திரம்.. மனைவி கொலை
சந்தேகத்தால் மனைவி மீது தாக்குதல்
அதாவது மனைவி ராணிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த இன்னொரு வாலிபருக்கும் கள்ளக்காதல் இருக்கலாம் என ரமேஷ் சந்தேகப்பட்டார். இதுதொடர்பாக ரமேஷ் தனது உறவினர்களுடன் சேர்ந்து ராணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ராணி மயங்கினார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருமணம் செய்து வைப்பு
முன்னதாக ராணிக்கும் அவரது கள்ளக்காதலர் என சந்தேகிக்கும் நபருக்கும் ரமேஷ் தரப்பு திருமணம் செய்து வைத்தது. இதுதொடர்பான வீடியோ வெளியானது. மேலும் சம்பவம் குறித்து அந்த பெண்ணின் கணவர் கூறுகையில், ‛‛கள்ளக்காதல் இருந்ததால் தான் மனைவியை தாக்கி அந்த நபருடன் திருமணம் செய்து வைத்தேன். இந்த தாக்குதலில் மனைவி மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதித்தேன். அங்கேயே இரவு முழுவதும் கழித்தேன்'' என தெரிவித்துள்ளார்.
மனைவி வாக்குமூலம்
இதுகுறித்து அறிந்தவுடன் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணையை துவங்கினர். விசாரணையின்போது ராணி திடுக்கிடும் தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், ‛‛எனது கணவர் உட்பட 15 பேர் சேர்ந்து என்னை நெல் வயல் பகுதிக்கு இரவில் அழைத்து சென்றனர். எனது நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறி சரமாரியாக தாக்கினர். மேலும், எனது காதலன் எனக்கூறி இன்னொரு நபருடன் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். பிறகு என்னையும், அந்த நபரையும் தாக்கினர். இதில் நான் மயங்கி சுயநினைவை இழந்தேன்'' என அழுதபடி கூறினார். இந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகளிர் ஆணையம் கண்டனம்
இந்த சம்பவத்துக்கு திரிபுரா மகளிர் ஆணையத்தின் தலைவர் பர்னாலி கோஸ்வாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நாகரீகமான சமுதாயத்தில் வாழும் நாம் ஒரு பெண்ணுக்கு நிகழும் இத்தகைய கொடூரமான சித்திரவதைகளை பொறுத்து கொள்ள முடியாது. திருமணமான பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் இன்னொரு ஆணுடன் திருமணம் செய்து வைப்பது சரியல்ல. உண்மை நிலையை அறியும் வகையில் பாதிக்கப்பட்ட நபரிடம் விசாரிக்க குழு ஒன்றை அனுப்புவோம்'' என்றார்.