கத்ரினா கைப், பிராவோ ஆட்டத்தோடு நாளை தொடங்குகிறது ஐ.பி.எல் சீசன்-9
மும்பை: ஐபிஎல் 9வது சீசனின் முதல் போட்டியில் நாளை, நடைபெறும் தொடக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதை முன்னிட்டு மும்பை வான்கடே மைதானத்தில் நாளை மாலை கோலாகல துவக்க விழா நடக்கிறது.
துவக்க விழாவில், பாலிவுட் நட்சத்திரங்கள் கேத்ரினா கைப், ரன்வீர் சிங் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதேபோல, மேற்கிந்திய தீவுகள் வீரரும், ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடப்போகிறவருமான பிராவோ, சாம்பியன் பாடலுக்கு நடனமாடுகிறார்.
இது குறித்து ஐபிஎல் சேர்மன் ராஜிவ் சுக்லா கூறியது: மும்பையில் நடக்கும் ஐபிஎல் 9வது சீசனின் துவக்க விழாவில், சாம்பியன் பாடலுக்கு பிராவோ நடனமாடுகிறார். அவருடன் இணைந்து இன்னும் சில மேற்கிந்திய தீவுகள் வீரர்களும் நடனமாடுகின்றனர். ஐபிஎல்லில் முதல் முறையாக எல்இடி ஸ்டம்புகளும் (ஒளிரும் ஸ்டம்புகள்) பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் கடந்த 2013ம் ஆண்டு முதல் முறையாக ஒளிரும் எல்இடி ஸ்டம்புகள் பயன்படுத்தப்பட்டன. அதன்பின் 2014ம் ஆண்டில் இருந்து ஐசிசி டி20 மற்றும் 50 ஓவர் உலக கோப்பை தொடர்களிலும் எல்இடி ஸ்டம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் ஐபிஎல்லில் முதல் முறையாக இந்த சீசனில்தான் எல்இடி ஸ்டம்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
நாளை தொடங்கும் 9வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மே 29ம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.