ஆம்.. இந்திய பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்தது உண்மை.. ஆனால்.. சொல்வது லடாக் பாஜக எம்.பி.
ஸ்ரீநகர்: லடாக் பகுதியில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதா என்று கேள்வி எழுப்பிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு, லடாக் லோக்சபா தொகுதி பாஜக எம்பி ஜம்யாங் செரிங் நம்கியால் பதிலடி தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி எல்லைக்குள் புகுந்து உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம், இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக ஏற்கவில்லை.
ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான அதிகாரிகளுடனான, பேச்சுவார்த்தை, கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடந்தவண்ணம் இருக்கின்றன.
மொத்தமாக வேண்டும்.. யார் கைப்பற்றுவது.. பாங்காங் திசோவில் சீனாவின் "பிஎல்ஏ" அத்துமீறல்.. பின்னணி!
ராகுல் காந்தி கேள்வி
இந்த நிலையில்தான், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். லடாக்கில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதா இல்லையா என்பதை ராஜ்நாத் சிங் சொன்னால் போதும் என்று ராகுல்காந்தி தெரிவித்திருந்தார்.
அமித் ஷா பெருமிதம்
அதேநேரம், உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வீடியோ கான்பரன்ஸ் உரையின்போது, இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக தனது எல்லைகளை பாதுகாப்பதில் உலக அளவில் இந்தியா வலிமையான நாடாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
லடாக் பாஜக எம்.பி.
இந்நிலையில் ராகுல்காந்தி கேள்விக்கு லடாக் தொகுதியின் பாஜக எம்பி ஜம்யாங் செரிங் நம்கியால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். சீனப் படைகள் ஆக்கிரமித்தன.. ஆனால்.. என்று கூறி வரிசையாக கடந்த காலங்களில் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி வகித்தபோது ஆக்கிரமித்த விவரங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். அக்சை சின் (37,244 சதுர கிமீ) 1962-ல் காங்கிரஸ் ஆட்சியின் போது, தியாபங்க்நாக் மற்றும் சப்ஜி பள்ளத்தாக்கு- 2008, தேம்ஜோக்கில் உள்ள ஜொராவர் கோட்டையை சீன ராணுவத்தினர் 2008ல் சேதம் செய்தனர். 2012ல் இதே இடத்தில் பிஎல்ஏ ராணுவம் கண்காணிப்பு மையத்தை அமைத்தது. 13 சிமெண்ட் வீடுகளையும் இந்தியப் பகுதியில் கட்டியது. இந்தியா தூம்செலியை 2008-09 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சீனாவிடம் இழந்தது. இவ்வாறு கூறியுள்ளார் அவர்.
ராகுல் காந்தி வலியுறுத்தல்கள்
இந்தியா-சீனா எல்லையில் என்ன நடக்கிறது என்பதை வெளிப்படையாக மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று ராகுல்காந்தி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். ஆனால் பாஜக தலைவர்கள், ராகுல் கருத்து, சீனாவுக்கு ஆதரவாக சென்றுவிடும் என்பதால் விமர்சனம் செய்யக்கூடாது என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.