நீங்க எங்களுக்கு பாடம் சொல்லித்தர வேண்டாம்.. அமெரிக்க பத்திரிக்கையை சரமாரியாக விளாசிய சிபிஐ!
பத்திரிக்கை சுதந்திரம் குறித்து எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையை சிபிஐ சரமாரியாக விளாசியுள்ளது,
டெல்லி: பத்திரிக்கை சுதந்திரம் குறித்து எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையை சிபிஐ சரமாரியாக விளாசியுள்ளது. எங்கள் நாட்டில் உள்ள சமூக நிறுவனங்கள் உயர்ந்த கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சிபிஐ நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு சவுக்கடி கொடுத்து கடிதம் எழுதியுள்ளது.
அன்னிய செலாவணி விதிகளை மீறி என்டிடிவி நிறுவனத்துக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக அதன் துணை நிறுவனரும், நிர்வாக துணை தலைவருமான பிரணாய் ராய்க்கு சொந்தமான வீடுகளில் சிபிஐ அண்மையில் ரெய்டு நடத்தியது.
பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் இந்தியாவில் உள்ள வங்கியில் ரூ.48 கோடி கடன்பெற்று அதை வெளிநாடுகளில் உள்ள அவர்களது நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

சிபிஐ அதிகாரிகள் சோதனை
இதையடுத்து வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரணாய் ராய் அவரது மனைவி ராதிகா ராய் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அவர்களது வீடு உட்பட 4 இடங்களில் கடந்த 5ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அரசியல் கட்சிகள் கண்டனம்
இந்த சோதனைக்கு இந்திய அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கருத்து சுதந்திரத்தை முடக்கும் நரேந்திர மோடி அரசின் மற்றுமொரு நடவடிக்கை இது என இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

சர்வதேச ஊடகங்களின் கவனம்
ஆனால் இதனை மறுத்த மத்திய அரசு சிபிஐ ரெய்டு நடவடிக்கையில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை என விளக்கம் அளித்தது. என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது.

நியூயார்க் டைம்ஸ் விமர்சனம்
என்டிடிவி மீதான சோதனையை குறிப்பிட்டு நியூயார்க் டைம்ஸ் 'இந்தியாவின் அடித்து நொறுக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம்' என தலைப்பில் தலையங்கம் வெளியிட்டது. சோதனைகளை விமர்சித்து தலையங்கம் எழுதப்பட்டு இருந்தது.

ஊடகங்களுக்கு அபாய சங்கு
இந்தியாவில் மோடியின் ஆட்சியில் செய்தி ஊடகங்கள் மீதான அபாய சங்கு ஒலிக்கும் புதிய வகை அச்சுறுத்தல்களின் அடையாளம் என்றும் நியூயார்க் டைம்ஸ் விமர்சனம் செய்து இருந்தது. இதற்கு சிபிஐ பதில் அளித்துள்ளது.

உங்க பாடம் தேவையில்ல
இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ஆசிரியருக்கு சிபிஐ செய்தி தொடர்பாளர் ஆர்.கே. கவுர் எழுதி உள்ள கடிதத்தில் 'பத்திரிகை சுதந்திரம் குறித்த பாடங்கள் இந்தியாவுக்கு உங்களிடமிருந்து தேவையில்லை. எங்களுடைய சமூக நிறுவனங்கள் மற்றும் மரபுகள் எங்களுடைய உயர்ந்த மற்றும் பல்வேறுவகையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஜனநாயக உரிமைகளால் வளர்க்கப்பட்டது' என தெரிவித்துள்ளார்.

முக்கிய தகவல்கள்..
மேலும் என்டிடிவி இந்திக்கு தடைவிதிக்கப்பட்டது குறித்து விமர்சித்ததற்கும் சிபிஐ பதிலளித்துள்ளது. 'விமானப்படை தளத்தில் தாக்குதல் நடந்த போது முக்கியமான தகவல்களை என்டிடிவி இந்தி ஒளிபரப்பியது.

ஜனநாயகம் சமரசம் செய்யாது
இவ்விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்பட்ட பின்னரே முடிவெடுக்கப்பட்டது, என்டிடிவியும் இடம்பெற்று இருந்தது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிடுவதால் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் ஜனநாயகம் சமரசம் செய்யாது. என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications