மும்பையில் விஷச்சாராய பலி 105 ஆக உயர்வு- 41 பேருக்கு தீவிர சிகிச்சை
மும்பை: மும்பையில் விஷச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 41 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மும்பை மால்வாணியில் கடந்த 17 ஆம் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் குடித்தனர். விஷத்தன்மை கொண்டிருந்த அந்த சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாங்கி குடித்துள்ளனர்.
இதனால் வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டு சுருண்டு விழுந்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மறுநாளே 13 பேர் இறந்துபோனார்கள். 19 ஆம் தேதி சாவு எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் மேலும் 35 பேரை விஷச்சாராயம் பலி கொண்டு விட்டது. இதனால் மூன்று நாளில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆனது.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்றும் பலர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். இதன் மூலம் விஷச்சாராயத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்து உள்ளது.