பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகளை நடும் சூப்பர் கிராமம்
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிப்லாந்தரி கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகளை நடுகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிப்லாந்தரி கிராமத்தில் பெண் குழந்தைகளை யாரும் பாரமாக கருதுவது இல்லை. மாறாக ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும் அந்த கிராமத்தில் 111 மரக்கன்றுகளை நட்டு வைக்கிறார்கள்.
மரக்கன்றுகளை நடுவதோடு கிராமத்தினர் மற்றும் பெற்றோரின் வேலை முடிந்துவிடுவது இல்லை.

பிக்சட் டெபாசிட்
குழந்தை பிறந்த உடன் கிராமத்தினர் ரூ.21 ஆயிரமும், குழந்தையின் பெற்றோர் ரூ.10 ஆயிரமும் அளித்து அதை அந்த குழந்தையின் பெயரில் வங்கியில் பிக்சட் டெபாசிட்டில் போட்டு வைக்கிறார்கள்.

ஒப்பந்தம்
தங்களின் பெண் குழந்தைக்கு நல்ல கல்வி அளிப்போம் என்றும், அந்த குழந்தை உரிய வயதை அடைந்த பிறகே திருமணம் செய்து வைப்போம் என்றும், குழந்தை பிறந்த பிறகு நட்டு வைத்த மரக்கன்றுகளை ஒழுங்காக வளர்ப்போம் என்றும் பெற்றோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

மரங்கள்
வளர்ந்து கனிகளை அளிக்கும் மரக்கன்றுகள் மட்டுமே நடப்படுகின்றன. அவற்றை பாதுகாக்க அவற்றுடன் கற்றாழையும் நடப்படுகிறது. அந்த கிராமத்தில் கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

மகள்
அந்த கிராமத்தின் முன்னாள் தலைவர் ஷ்யாம் சுந்தர் பாலிவாலின் மகள் இளம் வயதில் இறந்துவிட்டார். அவரை கௌரவிக்க இந்த மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஷ்யாம் சுந்தர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

போலீஸ் வழக்கு
பிப்லாந்தரி கிராமத்தில் கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தங்கள் கிராமத்தில் குற்றங்களே இல்லை என்று பெருமையாக கூறுகிறார்கள் பிப்லாந்தரி கிராமத்தினர்.












Click it and Unblock the Notifications