இந்தியா-இலங்கையை தரைவழியாக இணைக்க ரூ. 23 ஆயிரம் கோடியில் திட்டம்: நிதின் கட்காரி தகவல்
டெல்லி: இந்தியாவுடன் இலங்கையை தரைவழியாக இணைப்பதற்காக ரூ23 ஆயிரம் கோடியில் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
வங்கதேசம், பூட்டான், நேபாளம் நாடுகளுடன் மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா நேற்று கையெழுத்திட்டது. அப்போது இந்தியா- இலங்கையை தரைவழியாக இணைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விவரித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் ரூ 23 ஆயிரம் கோடி மதிப்பில் இந்தியா- இலங்கையை இணைக்கும் திட்டம் உருவாக்கப்படுகிறது.
தமிழகத்தின் தனுஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோ மீட்டர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பது அல்லது பாம்பன் நகரையும் தலைமன்னாரையும் (29 கிலோ மீட்டர்) இணைப்பது என்பது ஒரு திட்டம்.
இந்த இரண்டும் பொருந்தாத சமயத்தில் கடலின் கீழே சுரங்கப்பாதை அமைத்து இணைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.












Click it and Unblock the Notifications