லடாக்கில் ராணுவ தளபதி நரவனே- படுகாயமடைந்த ராணுவ வீரர்களை சந்தித்தார்
லே: லடாக் எல்லையில் இந்திய ராணுவ தளபதி நரவனே இன்று ஆய்வு நடத்தினார். லேவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சீனாவுடனான மோதலில் படுகாயமடைந்த ராணுவ வீரர்களை நரவனே சந்தித்து ஆறுதல் கூறினார்.
லடாக்கின் கிழக்கு பகுதியான கால்வனில் கடந்த 15-ந் தேதி இந்தியா - சீனா ராணுவத்தினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சுமார் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தொடர் பேச்சுவார்த்தைகள்
இதனால் இருநாடுகளிடையே போர்ச் சூழல் உருவானது. இதனிடையே இருநாடுகளிடையே பல்வேறு நிலைகளிலான தொடர்பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இந்தியா-சீனா- ரஷ்யா வெளியுறவு அமைச்சர்களின் வீடியோ கான்ஃபரன்ஸ் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
|
எல்லையில் ராணுவ தளபதி
இந்த சூழ்நிலையில் இந்திய ராணுவ தளபதி எம்.எம். நரவனே இன்று லடாக் எல்லைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். லடாக் எல்லைக்கு 2 நாட்கள் பயணமாக நரவனே சென்றார். லேவில் ராணுவ மருத்துவமனையில் கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வீரர்களை அவர் சந்தித்து பேசினார்.

ஶ்ரீநகரிலும் ஆய்வு
அத்துடன் எல்லையில் இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை விவரங்களையும் நரவனே கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து ஶ்ரீநகரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளையும் நரவனே ஆய்வு செய்கிறார்.

எல்லையில் இன்றும் பேச்சுவார்த்தை
இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று எல்லைப் பகுதியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை இன்றும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ராணுவ தளபதி நரவனேயின் எல்லை பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications