லடாக்கில் ராணுவ தளபதி நரவனே- படுகாயமடைந்த ராணுவ வீரர்களை சந்தித்தார்
லே: லடாக் எல்லையில் இந்திய ராணுவ தளபதி நரவனே இன்று ஆய்வு நடத்தினார். லேவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சீனாவுடனான மோதலில் படுகாயமடைந்த ராணுவ வீரர்களை நரவனே சந்தித்து ஆறுதல் கூறினார்.
லடாக்கின் கிழக்கு பகுதியான கால்வனில் கடந்த 15-ந் தேதி இந்தியா - சீனா ராணுவத்தினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சுமார் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் 11 மணி நேர பேச்சுவார்த்தை! லே விரையும் ராணுவ தளபதி.. என்ன நடக்கிறது?
தொடர் பேச்சுவார்த்தைகள்
இதனால் இருநாடுகளிடையே போர்ச் சூழல் உருவானது. இதனிடையே இருநாடுகளிடையே பல்வேறு நிலைகளிலான தொடர்பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இந்தியா-சீனா- ரஷ்யா வெளியுறவு அமைச்சர்களின் வீடியோ கான்ஃபரன்ஸ் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
|
எல்லையில் ராணுவ தளபதி
இந்த சூழ்நிலையில் இந்திய ராணுவ தளபதி எம்.எம். நரவனே இன்று லடாக் எல்லைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். லடாக் எல்லைக்கு 2 நாட்கள் பயணமாக நரவனே சென்றார். லேவில் ராணுவ மருத்துவமனையில் கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வீரர்களை அவர் சந்தித்து பேசினார்.
ஶ்ரீநகரிலும் ஆய்வு
அத்துடன் எல்லையில் இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை விவரங்களையும் நரவனே கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து ஶ்ரீநகரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளையும் நரவனே ஆய்வு செய்கிறார்.
எல்லையில் இன்றும் பேச்சுவார்த்தை
இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று எல்லைப் பகுதியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை இன்றும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ராணுவ தளபதி நரவனேயின் எல்லை பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.