காஷ்மீர் சட்டசபை தேர்தலை சீர்க்குலைக்க சதி? சிக்கிய 6 சீன கையெறி குண்டுகள்.. உஷாரான ராணுவம்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி வெளியாகி உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷீந்தரா செக்டரில் உள்ள டாச்சி வனப் பகுதியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு அங்கு சட்டசபை தேர்தல் என்பது நடத்தப்படவில்லை. முதல் முதலாக தற்போது சட்டசபை தேர்தல் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 90 தொகுதிகள் உள்ளது. இங்கு தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 இடங்களில் ஒரு கட்சி வெல்ல வேண்டும்.

தற்போது 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1ம் தேதி என 3 கட்டங்களாக 90 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது. அதன்பிறகு அக்டோபர் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்தது. 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால் ஜம்மு காஷ்மீர் முழுவதும் போலீஸ், ராணுவத்தின் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான இடங்களில் போலீசார், ராணுவத்தினர் தீவிரமாக ரோந்து சென்று வருகின்றனர். சமீபகாலமாக ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், மிரட்டல் சம்பவங்கள் குறைந்துள்ள நிலையில் தேர்தல் நெருங்குவதால் பயங்கரவாதிகள் சதி செயல்களில் ஈடுபடலாம் என்பதால் ராணுவத்தினர் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷீந்தரா செக்டாரில் உள்ள டாச்சி வனப் பகுதியில் ராணுவத்தினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது 6 கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை கைப்பற்றி ராணுவத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கையெறி குண்டுகள் சீனாவில் இருந்து தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் ராணுவத்தினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அந்த ஷீந்தரா செக்டாரில் பெரும் பரபரப்பை ஏற்படத்தி உள்ளது. மேலும் அங்கு வேறு யாராவது ஊடுருவி உள்ளனரா? என்பது பற்றியும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏனென்றால் இந்த பகுதி என்பது பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் இருக்கும் பகுதியாக உள்ளது. மேலும் கடந்த வாரம் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, 2 சீன கையெறி குண்டுகளுடன் கைது செய்யப்பட்டார். இதனால் தற்போது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications