இந்தியப் பெண் கொலை டி.ராஜா அதிர்ச்சி: தூதரகம் மூலம் உதவிகள் கிடைக்க நடவடிக்கை- சுஷ்மா
டெல்லி: ஆஸ்திரேலியாவில் இந்தியப் பெண் பொறியாளர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். பிரதமர் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிட்னியில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அனைத்து உதவிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டில் பணிபுரிந்து வந்த பெங்களூருவைச் சேர்ந்த பெண் பொறியாளர் பிரபா, வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
கத்திக்குத்து விழுந்த நிலையிலும், அவர் அங்குள்ள தனது குடும்ப உறவினருக்கு செல்போனில் தகவல் சொல்லி இருக்கிறார். அடுத்த சில வினாடிகளில் அவர் ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்து விழுந்தார்.
அவரை போன்றே வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த தோழி ஒருவர், பிரபா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பிரபா மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.
பிரபா படுகொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரபா இறந்தது குறித்து பெங்களூரில் வசிக்கும் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது அவர் பெங்களூரில் இருந்து சிட்னி நகருக்கு விரைந்துள்ளார்.
டி.ராஜா அதிர்ச்சி
இதனிடையே இந்த கொலைசம்பவத்திற்கு தலைவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ராஜா, இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்கு பாதுகாப்பு
ஆஸ்திரேலியா நாட்டில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேல்படிப்பிற்காகவும் ஆஸ்திரேலியாவிற்குச் சென்றுள்ளனர். எனவே அவர்களின் பாதுகாப்பிற்கு இந்திய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் தலையிட
இந்தியப் பெண் பொறியாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ள அவர், இந்த விசயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெளியுறவு அமைச்சகம்
ஆஸ்திரேலியாவில் இந்தியாவை சேர்ந்த பெண் கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், பெண் கொல்லப்பட்டது கவலை தரும் சம்பவம், இது எதிர்பாராதது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீசாருடன் இந்திய தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது. விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பை தருவோம் என கூறியுள்ளது.
சுஷ்மா ஸ்வராஜ்
இதனிடையே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேள்விப்பட்ட உடன், சிட்னியில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அனைத்து உதவிகளும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வரராஜ் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.