இனி ‘அந்நியனாகி’ டீடீஆர்னு கத்த வேண்டாம்.... ரயில் பயண குறைபாடு குறித்து செல்போனிலேயே புகார் தரலாம்!
டெல்லி: ரயில் பயணத்தின் போது ஏற்படும் குறைகளை பயணிகள் உடனுக்குடன் செல்போன் மற்றும் இணையதளத்தின் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தும் புதிய முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பான, திருப்தியான ரயில் பயணங்களை பயணிகளுக்கு ஏற்படுத்தித் தர ரயில்வே நிர்வாகம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டிலும் இது தொடர்பாக பல்வேறு திட்டங்களை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருந்தார்.
அதன்படி, ரயில்களில் பெண்கள் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள், ரயில் பயணிகளுக்கு ‘ஹெல்ப்-லைன்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதேபோல், இணையதளம் மற்றும் செல்போன் வாயிலாக எஸ்.எம்.எஸ். மூலம் ரயில் பயணத்தில் ஏற்படும் குறைகள் மற்றும் ரயில் சேவையை மேம்படுத்துவது தொடர்பான கருத்துக்களைப் பதிவு செய்யும் திட்டத்தினை கடந்த 2ம் தேதி ரயில்வே அமைச்சர் தொடக்கி வைத்துள்ளார்.
இந்த புதிய இணையதளத்தில் ரயில் நிலையங்கள் மற்றும் பயணம் செய்யும் பெட்டியில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருப்பது, குடிநீர் பிரச்சினை, திருட்டு சம்பவங்கள், இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினைகள், டிக்கெட் ரத்து செய்து பணம் கிடைக்காமல் போவது உள்பட 23 விதமான பிரச்சினைகள் குறித்து புகார் செய்யலாம்.
உதாரணமாக இணையதளத்தில் உணவு தொடர்பான புகார் தேர்வை தேர்வு செய்யும்போது, உணவில் தரமின்மை? அளவு குறைபாடு? அதிக விலை? சுகாதாரமின்மை? ஒழுங்கின்மை? தாமத சேவை? தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு இல்லாதது? மற்றும் பிற தகவல்கள் என்ற தேர்வுகள் கிடைக்கப்பெறுகிறது. இதில் புகார் கொடுக்கப்படும் பிரிவின் கீழ் உள்ள தேர்வினை ‘கிளிக்' செய்ய வேண்டும். பின்னர் பயணியின் பெயர், செல்போன் எண், முகவரி, மின்னஞ்சல் முகவரி, புகார் கூறப்படும் இடம் போன்றவற்றையும், புகார் தொடர்பான கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும்.
புகாரைத் தொடர்ந்து சிறப்பு பதிவெண் பயணிகளுக்கு தெரிவிக்கப்படும். அந்த எண்ணைக் கொண்டு, நமது புகார் மீதான நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
புகார் மட்டுமின்றி, ரயில் சேவையை மேம்படுத்துதல் தொடர்பான கருத்துக்களையும் இந்த இணையதளம் மூலம் பயணிகள் தெரியப்படுத்தலாம்.
இதற்கான அப்ளிகேஷனை www.coms.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பயணிகள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், 9717680982 என்ற எண்ணிற்கும் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் பயணிகள் புகார் அளிக்கலாம்.
இதே போல், பயணிகளின் பாதுகாப்புக்காக தமிழக ரயில்வே போலீசாரும் புதிய ‘அப்ளிகேஷன்' ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர். ஏற்கனவே இந்த ‘அப்ளிகேஷன்' மத்திய பிரதேசத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதில், தற்போது தமிழகத்தையும் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் முடிவடைந்ததும், தங்கள் செல்போனில் play store-ல் (பிளே ஸ்டோர்) சென்று GRP HELPLINE என்ற ‘அப்ளிகேஷனை' பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.