கோரக்பூர் கொடூரம்.. உ.பி முதல்வர் பதவி விலக காங்கிரஸ் கோரிக்கை
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் 60 பச்சிளம் குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் 60 பச்சிளம் குழந்தைகள் மிகப் பரிதாபமாக உயிரிழந்தன. இது உ.பி.யை அதிர வைத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், இந்த மரணத்திற்குக் காரணமான அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஆக்சிஜன் சப்ளையர், மாவட்ட நிர்வாகம் ஆகியவை மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர்.
இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்குத்தான் தார்மீக பொறுப்பு அதிகம். தார்மீக ரீதியாக முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் இந்த கோரச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் அவர்.
உ.பி. சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங், மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications