காபி குடிக்க வந்த பெண்ணை செல்போனில் படம் பிடித்த ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா: கைது செய்ய அரசு தயக்கம்
பெங்களூர்: காபி ஷாப்புக்கு வந்திருந்த பெண்களை திருட்டுத்தனமாக செல்போனில் படம் எடுத்து தர்ம அடி வாங்கிய ஐபிஎஸ் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் ராஜினாமாவை ஏற்கவும், அதிகாரியை கைது செய்யவும் அரசு தயங்கிவருகிறது.
பெங்களூரின் கன்னிங்காம் ரோடு பகுதியிலுள்ள காபி ஷாப் ஒன்றில் திங்கள்கிழமை 30 வயது மதிக்கத்தக்க இரு தோழிகள் கடந்த திங்கள்கிழமை காலை அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து நாற்காலியில் இருந்த ஒரு நபர் தனது செல்போனில் ரகசியமாக இந்த பெண்களை படம் பிடித்துக் கொண்டிருந்தார். இதை எதேர்ச்சையாக தோழிகளில் ஒருவர் பார்த்துவிட்டார்.
உடனடியாக எழுந்து சென்று அந்த நபரின் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு எங்களை எப்படி படம் எடுக்கலாம் என்று தகராறு செய்துள்ளார். இதை பார்த்த காபி ஷாப்புக்கு வந்த வாடிக்கையாளர்களும், சாலையோரம் நடந்து சென்றவர்களும் சேர்ந்து செல்போன் நபருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். அதற்குள் தகவல் அறிந்து போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர்.
ஹைகிரவுண்ட் போலீசில் அவர் ஒப்படைக்கப்பட்டார். தான் ஒரு போலீஸ்காரர் என்று அவர் கூறினாலும், சீருடை இன்றி, சாதாரண உடையில் இருந்த அவரது பேச்சை நம்பாத போலீசார் அந்த நபரை பிடித்து சென்று லாக்-அப்பில் தள்ளினர். ஆனால் விசாரணையின்போது, அவர் பெயர் ரவீந்திரநாத் என்றும், கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையின், கூடுதல் டிஜிபி (ஏடிஜிபி ) பணியில் உள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை விட்டுவிட்டனர்.
இதனிடையே பலத்த யோசனைக்கு பிறகு அதே நாள் இரவு 10.30 மணியளவில் நடந்த சம்பவம் குறித்து ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இதன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார், சட்டப்பிரிவு 354, 506 ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பெண்ணின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான கிரிமினல் நடவடிக்கை என்ற அடிப்படையில் வழக்குப்பதிவுக்கு உள்ளான நபர் ஜாமீனில்கூட வெளிவரமுடியாது. ஆனால் எப்.ஐ.ஆரில் குற்றவாளி பெயரை 'அடையாளம் தெரியாத போலீஸ் அதிகாரி' என்று நகைப்புக்குறிய வகையில் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. அதெப்படி அடையாளம் தெரியாமல் ஒரு காவல்துறை அதிகாரி இருப்பார் என்பது காவல்துறைக்கே வெளிச்சம்.
இச்செய்தி மீடியாக்களில் வெளியானதும் பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்த ஏடிஜிபி ரவீந்திரநாத், நான் பெண்களை போட்டோ எடுத்ததாக கூறுவது பொய். நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர் இந்த சதியின் பின்னணியில் உள்ளார் என்று அழுதபடியே பேட்டிகொடுத்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களோ, அதிகாரியின் செல்போனில் தங்களது இரு படங்கள் ஆபாசமான கோணங்களில் இருந்ததை கண்ணால் பார்த்ததாக புகாரில் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் அதிகாரியை காவல்துறை கைது செய்ய தயங்குவதாக ஊடகங்கள் குற்றம்சாட்டிவரும் நிலையில், திடீரென நேற்று ஹைகிரவுண்ட் காவல் நிலையம் சென்ற ரவீந்திரநாத், என்னை கைது செய்யுங்கள், எப்.ஐ.ஆரிலுள்ள அதிகாரி நான்தான் என்று வாலின்டயராக சென்று சவுண்ட் விட்டார். ஆனால் போலீசாரோ திருதிருவென விழித்தனரே தவிர கைது செய்வதாக இல்லை.
இதையடுத்து மாலையில் உள்துறை அமைச்சர் அழைத்திருந்த பாதுகாப்பு தொடர்பான போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற ரவீந்திரநாத், அங்குவந்த டிஜிபி லால்ருக்மோ பச்சாவோவிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இவ்வளவு சம்பவங்கள் நடந்தபிறகும் இதுவரை அந்த அதிகாரி கைது செய்யப்படவில்லை. மேலும் ராஜினாமா கடிதத்தையும் உள்துறை அமைச்சகம் இன்னும் ஏற்கவில்லை.
விசாரணை முடியும்வரை 5 மாதகாலம் கட்டாயவிடுப்பில் சென்றுவருமாறு அரசிடமிருந்து ரவீந்திரநாத்துக்கு வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெண்ணை போகப்பொருளாக பார்த்த ஒரு காவல்துறை அதிகாரியை இதுவரை கைது செய்யாமலும், அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்காமலும் அரசு இழுத்தடிப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.