உ.பியில் பாஜக அவ்வளவுதானா?... லோக்சபா இடைத்தேர்தலில் பெரிய அ(இ)டி!
உத்திரபிரதேசத்தில் பாஜகவின் செல்வாக்கு சரிந்து வருவதையே இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
Recommended Video

லக்னோ : உத்திரபிரதேசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றிய பொலிவெல்லாம் ஓராண்டில் மங்கி விட்டது. நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல் என இரண்டு வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு பாஜக ஆட்சி திருப்திகரமாக அமையவில்லை என்பதன் வெளிப்பாடு நடந்து முடிந்துள்ள 2 தொகுதி லோக்சபா இடைத்தேர்தல் முடிவுகளில் தெளிவாகியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் பாஜகவுக்கு பெரிதும் நம்பிக்கை அளித்த தேர்தல்கள் என்றால் அது 2014 நாடாளுமன்ற தேர்தலும், 2017 சட்டசபை தேர்தலும் தான்.
2014 நாடாளுமன்ற தேர்தலில் 71 தொகுதிகளில் பாஜக வென்று மத்தியில் ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது. எனினும் உத்திரபிரதேசத்தில் ஆட்சியமைப்பது என்பது பாஜகவிற்கு எட்டாக்கனியாகவே இருந்தது.
உ.பியில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையேயான போட்டிகளே சட்டசபை தேர்தலிகளில் இருந்தன. 1997-க்கு பின் மதவாத கட்சி என்ற கறை, தலித்களின் வெறுப்பு ஆகியவற்றின் காரணமாக உ.பி-யில் கால் பதிக்கமுடியாமல் பி.ஜே.பி திணறிக்கொண்டிருந்தது.

ஜாதி வாரியாக ஓட்டை பிரித்த பாஜக
இப்படிப்பட்ட கரையைத் தான் 2017 சட்டசபை தேர்தலில் பாஜக துடைத்தெறிந்தது. உ.பி-யில் ஒவ்வொரு தொகுதியையும் ஜாதி வாரியாக கணக்கிட்டு, அந்த தொகுதியில் எந்த ஜாதியினர் அதிகம் என்று பார்த்து அவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது பாஜகு. இதன் மூலம் 290தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.

இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள உ.பி
பாஜகவின் இந்த வெற்றியும், உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடுகளுமே மற்ற எல்லா மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக மார்தட்டி பாஜகவினர் சொல்லி வந்தனர். இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள உ.பியிலேயே பாஜக ஆட்சியை கைப்பற்றிய காரணத்தை சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டு வந்தனர்.

பாஜக பொலிவு மங்கிவிட்டது
ஆனால் பாஜகவின் செல்வாக்கு உத்திரபிரதேசத்தில் இன்னமும் அப்படியே இல்லை என்பதை லோக்சபா இடைத்தேர்தல்கள் வெளிக்காட்டியுள்ளன. பாஜக வை அசைத்தே பார்க்க முடியாத கோரக்பூர் லோக்சபா இடைத்தேர்தலில் அதிலும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியிலேயே பாஜக வேட்பாளரை மண்ணை கவ்வ வைத்துள்ளது சமாஜ்வாதி கட்சி.

அதிருப்தியில் உள்ள மக்கள்
இதே போன்று புல்புர் தொகுதியிலும் பாஜக வேட்பாளரை தோற்கடித்துவிட்டு சமாஜ்வாதி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். பாஜகவின் இந்த தோல்விக்கு முக்கிய காரணங்களாக 2 சொல்லப்படுகின்றன. முதலில் 2014 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2017 சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்தோம் ஆனால் அவர்களால் எங்களுக்கான ஆட்சியை தர முடியவில்லை என்று மக்கள் கருதுகின்றனர்.

கைகோர்த்த மாநிலக் கட்சிகள்
மற்றொன்று மாநிலக் கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இடையே எதிர் எதிர் கருத்துகள் இருந்தாலும் இந்த தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடாமல் சமாஜ்வாதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமது கட்சித் தொண்டர்களை அழைத்து சமாஜ்வாதி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். பாஜக அல்லாத ஒருவரே தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் இடைத்தேர்தலுக்கு மாயாவதி கட்சியினருக்கு கொடுத்த அஜென்டா.

பாஜகவிற்கு மிகப்பெரிய அடி
மாநிலக் கட்சிகளின் இந்த புதிய கூட்டணி பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் திட்டப்படியே கோரக்பூர், புல்புரில் சமாஜ்வாதி வேட்பாளரே முன்னிலை வகிக்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட இந்த இடைத்தேர்தல் முடிவு பாஜக தலைமைக்கு மிகப்பெரிய இடியை தலையில் இறக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications