கைது செய்துதான் நிலைமையை சமாளிப்பீர்களா..வதந்தி வழக்கில், தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி
டெல்லி: ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியோரை கைது செய்வது சரியா? என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியதோடு, வதந்தி பிரச்சினையை நீங்கள் இப்படித்தான் சமாளிப்பீர்களா எனவும் வினவியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் இதுவரை சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்து பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தப்பான தகவல்களை பரப்பி, வதந்தி கிளப்பியதாக சென்னை, தூத்துக்குடி, கோவை என பல நகரங்களை சேர்ந்த 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆதரவாளர்கள் இந்த கைது நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தாலும், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சிகள், மார்கண்டேய கட்ஜு போன்ற சட்ட வல்லுநர்கள், இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கிறார்கள். இது கருத்துரிமைக்கு எதிரான பாசிச போக்கு என அவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது நடவடிக்கைகளை கைவிடவும், கைதானவர்களை விடுதலை செய்யவும், சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனு இன்று நீதிபதி, தீபக் மிஸ்ரா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வதந்தி பரப்பியோரை கைது செய்தது சரிதானா.. நிலைமையை இப்படித்தான் கட்டுப்படுத்துவீர்களா? என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது.
அதேநேரம், மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்துவிட்டது சுப்ரீம் கோர்ட்.