இஷ்ரத் என்கவுண்ட்டர்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் அமித் ஷா விடுவிப்பு- 4 ஐபி அதிகாரிகள் சேர்ப்பு!
அகமதாபாத்: மாணவி இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ 2வது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த என்கவுண்ட்டருக்கு காரணமாக சொல்லப்பட்ட குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சரும் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய சகாவுமான அமித் ஷா பெயர் இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. ஆனால் ராஜேந்திர குமார் உட்பட 4 ஐபி அதிகாரிகள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
2004ஆம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி குஜராத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியில் மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில போலீசார் அறிவித்தனர். மேலும் போலீசுக்கு ஐபி கொடுத்த தகவலின் பேரில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய வந்த தீவிரவாதிகள்தான் அவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டனர்.

ஆனால் இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதலாவது குற்றப் பத்திரிகையில், போலீசார் நடத்தியது போலி என்கவுன்ட்டர்தான். சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரும் கடத்தி அடைத்து வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த போலி என்கவுன்ட்டருக்கு காரணமாக குஜராத் மாநில போலீஸ் அதிகாரிகளின் பெயரையும் அதில் சிபிஐ குறிப்பிட்டிருந்தது.
அதிலேயே மத்திய உளவு அமைப்பின் (ஐபி) குஜராத் அதிகாரியான ராஜேந்திர குமாருக்கும் இதில் தொடர்பிருப்பதாகவும் அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2வது குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
அமித் ஷா விடுவிப்பு
இதில் இந்த என்கவுண்ட்டருக்கு காரணமாக சொல்லப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய சகாவான மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் உத்தரப்பிரதேச பொறுப்பாளராக அமித் ஷா நியமிக்கப்பட்டிருப்பதால் பாஜக நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கிறது.
4 ஐபி அதிகாரிகள்..
அதே நேரத்தில் ஐபி அதிகாரிகள் ராஜேந்திர குமார், பி. மிட்டல், எம்.கே. சின்ஹா மற்றும் ராஜிவ் வான்கடே ஆகியோர் மீது புதிய குற்றப் பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications