வங்கத்து பெரியார்.. வித்யாசாகர் சிலையை உடைத்து வாங்கி கட்டிக்கொள்ளும் பாஜக.. என்ன நடந்தது?
கொல்கத்தாவில் பாஜக நடத்திய பேரணியில் ஈஸ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கொல்கத்தா: கொல்கத்தாவில் பாஜக நடத்திய பேரணியில் ஈஸ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று பாஜக சார்பாக கொல்கத்தாவில் நடந்த பேரணியில் பெரிய கலவரம் ஏற்பட்டது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று மேற்கு வங்கத்தில் பிரம்மாண்ட சாலை பேரணியை நடத்தினார். இதில்தான் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் இடையே பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது.

கொல்கத்தா கல்லூரி சாலையில் உள்ள வித்யாசாகர் கல்லூரி அருகே இந்த பேரணி செல்லும் கலவரம் உருவானது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் அந்த வித்யாசாகர் கல்லூரிக்குள் சென்று அங்கிருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அங்கு இருந்த ஈஸ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலையை அடித்து உடைத்தனர். ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் மேற்கு வங்கத்தில் மிக மிக முக்கியமான தலைவர். இது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வித்யாசாகர் அம்மாநிலத்தில் பெரிய அளவில் மதிக்கப்படும் தலைவர். அந்த அளவிற்கு மேற்கு வங்கத்தில் நிறைய சீர் திருத்தங்களை கொண்டு வந்து இருக்கிறார். வங்காள மொழியில் இவர் கொண்டு வந்த மாற்றங்களைத்தான் இப்போதும் வங்காள மக்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த மொழிக்கு புதிய வடிவம் கொடுத்ததே இவர்தான்.
பெண் விடுதலைக்காக குரல் கொடுத்த இவர் விதவை மறுமண சட்டத்தை அம்மாநிலத்தில் நிறைவேற்ற முக்கிய காரணமாக இருந்தார். அதேபோல் குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டம் கொண்டு வரவும் முக்கிய காரணமாக இருந்தார்.
அம்மாநிலத்தில் அரசியல் அடையாளமாக இவர் பார்க்கப்படுகிறார். இவர் படித்த சம்ஸ்கிருத கல்லூரியில் பிராமணர்கள் மட்டுமில்லாமல் அனைத்து ஜாதியினரும் வந்து படிக்கும் வகையில் மாற்றங்களை கொண்டு வந்தார். சூத்திரர்கள் படிக்க கூடாது என்று எங்கும் குறிப்பிடவில்லை என்று கூறி, அனைத்து ஜாதியினரையும் படிக்க வைத்தார்.
இதனால் இவர் மீது அனைத்து ஜாதியினருக்கும் மிகுந்த மரியாதை இருக்கிறது. தொடர்ந்து இவர் ஜாதிக்கு எதிரான பாகுபாட்டிற்கு எதிராக குரல் கொடுத்தார். ஜாதி மாறிய திருமணத்திற்கும் இவர் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார். அதே சமயம் இவர் சமஸ்கிருத மொழிக்கும் நிறைய தொண்டு ஆற்றி இருக்கிறார்.
பிராமண குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், அச்சமூகத்தை சேர்ந்த மக்களும் இவருக்கு பெரிய அளவில் ஆதரவு அளித்து வந்தனர். தான் படித்த வேதத்தை வைத்தே மற்ற ஜாதியினருக்கு ஆதரவான கருத்துக்களை இவர் கூறினார். தமிழகத்தில் பெரியாருக்கு இணையாக பார்க்கப்படும் மறுமலர்ச்சி தலைவர் ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர்.
இந்த நிலையில்தான் இவரின் சிலையை ஆர்எஸ்எஸ் பாஜகவினர் உடைத்து இருக்கிறார்கள். இது மேற்கு வங்கத்தில் பெரிய அதிர்ச்சியை, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் குதிக்க உள்ளது. இதற்கு எதிராக இன்று மாலை அங்கு திரிணாமுல் பெரிய பேரணி நடத்த உள்ளது.
அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், மக்கள் பலர் இவரது புகைப்படத்தை டிபியாக வைக்க தொடங்கி இருக்கிறார்கள். இவரை மையமாக வைத்தே இனி தேர்தல் பிரச்சாரத்தை நடத்த திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டு இருக்கிறது. இந்த புதிய பாதை, அங்கு லோக்சபா தேர்தலின் கடைசி கட்ட வாக்குபதிவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications