சந்திரயான் 3 டூ இன்சாட் 3டிஎஸ்.. சூலூர்பேட்டை கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழிபாடு.. பின்னணி
ரீஹரிகோட்டா: வானிலை மாற்றங்களை துல்லியமாக கணித்து சொல்ல இன்சாட் - 3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ. முன்னதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் சூலூர்பேட்டையில் உள்ள செங்காளம்மா கோயிலில் தரிசனம் செய்திருக்கிறார்.
வானிலை நிலவரத்தை அறிந்துகொள்ள இந்தியா தரப்பில் ஏற்கெனவே சில செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு, அவை வெற்றிகரமாக செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இருப்பினும், இனி வரும் காலங்களில் வானிலையை மிக துல்லியமாக கண்டறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. காரணம் மாறி வரும் காலநிலைதான். உலகின் வெப்பம் முன்பை விட இப்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இது வானிலையில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

எதிர்பாராத புயல்கள், தீவிரமான பருவமழை, அல்லது பருவமழை காலங்களில் மழையே பெய்யாமல் இருப்பது, வறட்சி ஒருபுறம் எனில், வெள்ளம் மறுபுறம் என தீவிரமான வானிலை மாற்றத்தை இந்த காலநிலை மாற்றம் ஏற்படுத்தும். கடந்த ஆண்டு தொடக்கத்தில் பிரிட்டன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலை எதிர்கொண்டது. அடிப்படையில் பிரிட்டன் ஒரு குளிர் பிரதேசம். ஆனால் அதீத வெயில் பதிவானதற்கு காரணம் காலநிலை மாற்றம்தான்.
அதேபோல பாகிஸ்தான் பெரும் வெள்ளத்தை எதிர்கொண்டது. இதுவரை இப்படியான வெள்ளத்தை அந்நாடு எதிர்க்கொண்டதில்லை. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, வானிலை ஆய்வு மையம் மீது விமர்சனங்களை ஏற்படுத்தியது. எனவே, வானிலையை துல்லியமாக கணிக்க இன்சாட் - 3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ.
முக்கியமான விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது இஸ்ரோ தலைவர் சோம்நாத் கோயில்களில் வழிபாடு நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படுவதற்கு முன்னர் அவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் தரையிறங்கிய பின்னர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பௌர்ணமிகாவு பத்ரகாளி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.
அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை. அதாவது, அறிவியலும் ஆன்மிகமும் இரண்டு வெவ்வேறு பகுதிகள் என்றும், அவை ஒன்றோடொன்று இணைக்கப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் கூறியிருந்தார். இதனையடுத்து நிலவில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய பகுதிக்கு 'சிவசக்தி' என்கிற பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை இன்சாட் - 3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ. முன்னதாக அதன் தலைவர் சோம்நாத் சூலூர்பேட்டையில் உள்ள செங்காளம்மா கோயிலில் தரிசனம் செய்திருக்கிறார். இந்த கோயில் 4-5ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கோயில் கருவறையில் உள்ள காளி சிலையை, இடது பக்கமாக பார்த்தால் பார்வதி போன்றும், வலது பக்கமாக பார்த்தால் சரஸ்வதி போன்றும், நடுவில் மகாலட்சுமியை போன்றும் இருப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் இக்கோயில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications