காங். எம்பியின் ஒடிஷா, ஜார்க்கண்ட் வீடுகளில் ஐடி ரெய்டு.. அள்ள அள்ள ரூ150 கோடி ரொக்கம் சிக்கியது!
புவனேஸ்வர்: காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான ஒடிஷா மற்றும் ஜார்க்கண்ட் வீடு, கம்பெனிகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ150 கோடி ரொக்கம் சிக்கியது வருமான வரித்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான பவுத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஒடிஷா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒடிஷாவில் புவனேஸ்வர், சம்பல்பூர், பொலாங்கீர், திதிலாகர், பவுத், சுந்தர்கார், ரூர்கேலா ஆகிய இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன.

இச்சோதனைகளின் போது தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ150 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மட்டுமே சிக்கியது வருமான வரித்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த பணத்தை எண்ணும் பணிகளில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டன. முதலில் 8 பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு எண்ணப்பட்டன. பின்னர் மேலும் 3 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது.
இந்த விவகாரத்தில் மேலும் பல காங்கிரஸ் எம்பிக்களுக்கு தொடர்பிருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என பாஜக தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜகவின் ராஜ்யசபா எம்பி தீபக் பிரகாஷ் தமது எக்ஸ் பக்கத்தில், ஒரே ஒரு காங்கிரஸ் எம்பிக்கு சொந்தமான இடத்தில் மட்டுமே இவ்வளவு பணம் சிக்கி இருக்கிறதே.. இது ஒரு சிறிய உதாரணம்தான். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆட்சியில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்கிற எங்கள் குற்றச்சாட்டு உண்மையாகிறது என்றார். மற்றொரு பாஜக பிரமுகர் அமர் குமார் கூறுகையில், பணத்தை எண்ண முடியாமல் இயந்திரங்களே நின்றுவிட்டதாக சொல்லப்படுகிறது என பகீர் கிளப்பி இருக்கிறார். இந்த சம்பவம் ஒடிஷா, ஜார்க்கண்ட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications