அதிகாலை 5.15 மணிக்கு டெலிவரி.. இரவு 12.30 மணி வரை மக்கள் பணி.. கடமை தவறாத மேயர்.. சபாஷ்!
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் நகரின் மேயராக உள்ள சவுமியா தனது டெலிவரிக்கு சில மணி நேரங்கள் வரை தொடர்ந்து மக்கள் பணியாற்றியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக அரசு பணியாக இருந்தாலும் சரி தனியார் பணியாக இருந்தாலும் சரி சளி பிடித்தாலே எப்படியாவது வேலை செய்யாமல் மட்டம் அடிக்க சிலர் முயற்சிப்பர். அது போல் கர்ப்பிணிகளுக்கு இரு துறைகளிலும் பல சலுகைகள் உள்ளன.
அவர்கள் முன்கூட்டியே விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். பிரசவத்திற்கு முன்னர், பின்னர் என பிரித்து பிரித்து மகப்பேறு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் தனக்கான வேலையை மற்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் ஆப்ஷனும் இருக்கிறது.
ஜெய்ப்பூர் மேயர்
ஆனால் இவை எல்லாத்தையும் விட்டுவிட்டு என் வேலையை நான் செய்வேன், அப்படி செய்தால்தான் எனக்கு முழு திருப்தி ஏற்படும் என ஜெய்ப்பூர் மேயர் டெலிவரிக்கு சிறிது நேரத்திற்கு முன்னர் வரை தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். அவர் ஜெயப்பூர் நகர மேயர் டாக்டர் சவுமியா குர்ஜார் ஆவார்.
மாநகராட்சி கூட்டம்
அவருக்கு வியாழக்கிழமை அதிகாலை 5.14 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதற்கு முன்னர் புதன்கிழமை இரவு வரை அவர் பணியாற்றியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சவுமியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் செய்யும் தொழிலே தெய்வம். புதன்கிழமை இரவு வரை மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
ஆண் குழந்தை
பிரசவ வலி ஏற்பட்ட பின்னர் நள்ளிரவு 12.30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதிகாலை 5.14 மணிக்கு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தேன் என குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தானில் பதவியில் இருந்த போது குழந்தையை பெற்றெடுத்த முதல் மேயர் சவுமியா என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே மாதம்
சவுமியா ஒரே மாதத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விடுமுறையே எடுக்காமல் செய்து முடித்துள்ளார். இவர் கர்ப்பிணியாக இருந்த போதே மேயர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்திருந்தார். இவருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.