ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 4 நாட்களில் 14 பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல்! 'பெரும் படையை' இறக்கிய பாஜக!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் கடந்த 4 நாட்களில் மொத்தம் 14 பேர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை மறுநாள் ஆகஸ்ட் 27-ந் தேதி கடைசி நாள். ஜம்மு காஷ்மீரில் தேர்தல் களப் பணிகளை மேற்கொள்ள 77 பேர் கொண்ட குழுவை பாஜக களமிறக்கி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18-ந் தேதியும் 2-வது கட்டமாக 26 தொகுதிகளில் செப்டம்பர் 25-ந் தேதியும் 3-வது கட்டமாக 40 தொகுதிகளில் அக்டோபர் 1-ந் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 90 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 1-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் ஆகஸ்ட் 20-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. இந்த தொகுதிகளில் ஆகஸ்ட் 27-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். கடந்த 4 நாட்களில் (ஆகஸ்ட் 24 வரை) மொத்தம் 14 பேர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் ஷகீனா, நசீர் அகமது, அப்னி கட்சியின் அப்துல் மஜீத் பட்டார், மக்கள் ஜனநாயகக் கட்சியின் முகம்மது சர்தாஜ் மத்னி, மெகபூப் பெக் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். புல்வாமா மாவட்டம் பம்போர் சட்டசபை தொகுதியில் அப்னி கட்சியின் அல்தாப் அகமது, சுயேட்சையாக ஆசிப் நபி தர் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை அடுத்தடுத்து தாக்கல் செய்ய உள்ளனர்.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் களப் பணிகளை மேற்கொள்ள 35 பேர் கொண்ட குழுவை முதல் கட்டமாக அனுப்பி வைத்துள்ளது பாஜக. இதனையடுத்து மேலும் 42 பேர் கொண்ட குழுவை 2-வது கட்டமாக பாஜக மேலிடம் அனுப்பி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications