தமிழகத்தின் உள்விவகாரத்தில் தலையிடுகிறது கர்நாடகா.. சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து ஜெ. புது வாதம்
டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு செய்துள்ள அப்பீலானது, தமிழகத்தின் உள் விவகாரத்தில் தலையிடும் செயலாகும் என்று முதல்வர் ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தது பெரும் சர்ச்சையையும், விவாதங்களையும் கிளப்பியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. மேலும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் அப்பீல் செய்துள்ளார். இந்த வழக்கில் பாஜகவைச் சேர்ந்தவரான சுப்பிரமணியசாமியும் ஒரு தரப்பாக சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து 6 நிறுவனங்களை விடுவித்ததை எதிர்த்தும் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணையில் உள்ளன. இந்த வழக்கில் ஒவ்வொரு தரப்பும் தங்களது தரப்பு நியாயத்தின் முக்கிய அம்சங்களை எழுத்து வடிவில் சமர்ப்பிக்க பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கர்நாடக அரசு, சுப்பிரமணியம் சாமி ஆகியோர் தங்களது தரப்பு நியாயம் குறித்து எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்து விட்டனர். ஜெயலலிதா தரப்பில் நேற்று அவரது வழக்கறிஞர் கெளரவ் குமார் அகர்வால் மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..
அன்பழகன் யார்
மனுதாரர் அன்பழகன் இந்த வழக்கினால் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டவர் அல்ல. அவர் புகார்தாரரும் அல்ல. எனவே அவருக்கு இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அதே போல சுப்பிரமணிய சாமிக்கும் முகாந்திரம் இல்லை. இந்த வழக்கில் தேவையான முகாந்திரம் தமிழக அரசுக்கு மட்டுமே உள்ளது.
கர்நாடகத்திற்கு என்ன வேலை
இந்த வழக்கில் இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தமிழ்நாடு தொடர்பு உடையவை. எனவே கர்நாடக அரசுக்கு மேல்முறையீடு செய்ய எந்த முகாந்திரமும் கிடையாது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு தமிழ்நாட்டின் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு மட்டுமே முகாந்திரம் உள்ளது.
வழக்கை நடத்த மட்டுமே அதிகாரம்
சொத்து குவிப்பு வழக்கை தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் உள்ள கோர்ட்டுக்கு மாற்றி வழக்கை நடத்துவதற்கு மட்டுமே கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு கர்நாடக அரசுக்கு எந்த உத்தரவையும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கவில்லை.
உள் விவகாரத்தில் எப்படித் தலையிடலாம்
இதுபோன்ற மேல்முறையீட்டை தாக்கல் செய்திருப்பதால் கர்நாடக அரசு தமிழ்நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்துள்ளது. இது அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 162 மற்றும் 245 ஆகியவற்றை மீறும் செயலாகும்.
தமிழ்நாடு போலீஸ்தான் விசாரிக்க முடியும்
ஜெயலலிதா பொது ஊழியர் என்பதால் அவரை விசாரிக்க தமிழகத்தின் மாநில போலீசுக்கு மட்டுமே முகாந்திரம் உண்டு. தமிழ்நாட்டின் விவகாரங்களில் குறுக்கிட கர்நாடக அரசுக்கு சட்டரீதியான அதிகாரம் ஏதும் இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றங்களை விசாரிக்க கர்நாடக அரசுக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது.
எப்படி மனு செய்யலாம்
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதையும் வாதிகள் தரப்பு நிரூபிக்காத நிலையில் அவர்களை உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக தனி விடுப்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் உயர்நீதிமன்றம் விடுவித்த நிலையில் அதே தடயங்கள் மற்றும் சாட்சியங்கள் மீது வேறு ஒரு கோணத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்யமுடியுமா?
சுப்ரீம் கோர்ட் எப்படித் தலையிட முடியும்
மேல்முறையீட்டில் உள்ள நிறுவனங்களுக்கும், ஜெயலலிதாவுக்கும் தொடர்பு இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் நிரூபித்து விட்ட நிலையில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எப்படி இதில் தலையிட முடியும் என்றும் ஜெயலலிதா தரப்பு கேட்டுள்ளது.
பிப்ரவரி 2 முதல் விசாரணை
இந்த மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 2ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 3 மற்றும் 4ம் தேதிகளில் விசாரணை நடைபெறு். அதன் பின்னர் மேலும் விசாரணையை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.