ஜெ., ஜாமீன் மனு விசாரணை எதிரொலி: கர்நாடக ஹைகோர்ட், ஜெயிலை சுற்றி 144 தடையுத்தரவு அமல்!
பெங்களூர்: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், கோர்ட் மற்றும் சிறைச்சாலையை சுற்றிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா கடந்த மாதம் 27ம்தேதி முதல், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். தசரா விடுமுறைக்காலம் காரணமாக கர்நாடக ஹைகோர்ட்டுக்கு கடந்த வாரம் விடுமுறைவிடப்பட்டிருந்ததால் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு விடுமுறைக்கால அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இருப்பினும் விடுமுறைக்கால நீதிபதி ரத்தினகலாவோ, வழக்கமான கோர்ட்டில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறி செவ்வாய்க்கிழமைக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
இதையடுத்து நாளை ஜாமீன் மனுமீதான விசாரணை ஹைகோர்ட் நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. கடந்த முறை ஜாமீன் விசாரணையை ரத்தினகலா தள்ளி வைத்தபோது, அதிமுகவை சேர்ந்த வக்கீல்கள் ஹைகோர்ட் வளாகத்தில் போராட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினர். ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டதும், மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அதிமுகவினர் தர்ணா நடத்தினர்.
இதுபோன்ற காரணங்களால், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதை உணர்ந்த பெங்களூர் போலீசார், நாளை காலை முதல் மாலை வரை, கர்நாடக ஹைகோர்ட் மற்றும் மத்திய சிறைச்சாலையை சுற்றிலும் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடையுத்தரவை பிறப்பித்துள்ளனர். இதன்மூலம் மேற்கண்ட பகுதிகளில், கூட்டம் போட்டால் போலீசார் கைது செய்ய முடியும்.