சொத்துக் குவிப்பு வழக்குக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜெ. மீண்டும் மனு- 26ல் விசாரணை
டெல்லி: சொத்து குவிப்பு வழக்குக்கு தடை கேட்டு முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனு சுப்ரீம் கோர்ட்டில் 26 ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சும்ரீம் கோர்ட்டில் மனு:
இந்தநிலையில், "லெக்ஸ் பிராபர்ட்டீஸ்" சொத்து தொடர்பான முக்கிய வழக்கு முடியும் வரை பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் கடந்த 13 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மறுத்த கோர்ட்:
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்ததுடன், வேண்டுமானால் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லலாம் என்றும் கூறியது.இதனால், லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் வழக்கின் மீது தீர்ப்பு வரும் வரை சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கின் மீது தடை விதிக்க மறுத்துவிட்டது.

மீண்டும் மனுத்தாக்கல்:
லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் சொத்து முடக்கம் தொடர்பான முக்கிய வழக்கு முடியும் வரை பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்குக்கு தடை விதிக்கவேண்டும் என ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையில் முடிவு:
இந்த மனு விடுமுறை அமர்வு நீதிபதிகள் ஏ.கே சவுகான் மற்றும் ஏ.கே சிக்ரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான பிற நிறுவனங்களின் வழக்குகளை விசாரித்த பிறகே சொத்து குவிப்பு வழக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணை வருகிற 26 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications