கர்நாடகா கிரீன் சிக்னல் தந்தும், ஜெ.வை சென்னை சிறைக்கு மாற்ற தமிழக அரசு முயலாதது ஏன்?
பெங்களூர்: "கூட்டிட்டு போங்க ஜெயலலிதாவை.." என்று அழாத குறையாக கர்நாடகம் கெஞ்சியும் தமிழக அரசு சார்பில் ஜெயலலிதாவை சென்னை ஜெயிலுக்கு மாற்ற யாரும் பெட்டிஷன் போடுவதாக தெரியவில்லை. இதன் பின்னணியில் சாட்சாத் ஜெயலலிதாவே இருப்பதாக கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த மாதம் 27ம் தேதி முதல் பெங்களூர் சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 7ம் தேதி ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது தனக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று ஜெயலலிதா உறுதியாக நம்பிக்கொண்டிருந்தார்.
வந்த கார் திரும்பியது
ஜாமீன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான், ஜெயலலிதாவை வைத்துள்ள சிறைக்கு வெளியே அவர் வழக்கமாக பயன்படுத்தும் சொகுசு கார் வரவழைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதன்பிறகு கார் சென்னை சென்றது தனிக்கதை.
வக்கீல்கள் அவசரம்
ஹைகோர்ட்டில் ஜாமீன் கிடைக்கவில்லை என்ற உடனேயே, ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள், சென்னை சிறைக்கு அவரை இடமாற்றம் செய்ய கோர்ட்டில் பெட்டிஷன் போடலாமா என்று யோசித்துள்ளனர். பெங்களூரில் இருந்து சென்னை சிறைக்கு மாற்ற கோர்ட் உத்தரவு அவசியம் என்பதால் ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் பரபரத்துள்ளனர்.
சென்னை வேண்டாம்
இதுகுறித்து ஜெயலலிதா மற்றும் சசிகலாவிடம் சொல்லி அனுமதியும் கேட்டுள்ளனர். ஆனால், சாட்சாத், ஜெயலலிதாவே, இந்த முயற்சியை கைவிடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், புழல் சிறையை விட பெங்களூர் சிறை எவ்வளவோ வகையில் வசதியாக இருப்பதுதானாம்.
கப்..சிப்.. பெங்களூர்
குறிப்பாக, பெங்களூர் சிறையில் ஏசி உள்ளிட்ட வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தாலும், அதுகுறித்து ஆதாரப்பூர்வமாக செய்தி வெளியே கசியவில்லை. ஆனால், புழலாக இருந்தால் போட்டோவோடு விவரம் வெளியே போயிருக்கும் என்பதுதான் சிறை மாற்றம் வேண்டாம் என்பதற்கான காரணமாக கூறப்படுகிறது.
திமுக அனுதாபிகள் இருப்பார்களே..
ஏனெனில் தமிழகத்தில் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மூலமாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சலுகைகள் குறித்த தகவல் வெளியே கசிய வாய்ப்புள்ளது. எனவே ஜாமீன் கிடைக்கும் வரை பெங்களூர் சிறைதான் சேஃப்டி என்கிறதாம் ஜெயலலிதா தரப்பு. பெங்களூர் கிளைமேட்டும் ஜெயலலிதாவிற்கு பிடித்துப் போயுள்ளதாம்.
போட்ட பெட்டிஷனுக்கும் எதிர்ப்பு
எனவேதான், தமிழ்நாட்டு சிறைக்கு ஜெயலலிதாவை மாற்றவேண்டும் என ஒருவர் தாக்கல் செய்த மனுவைப் பற்றி, "விஷம நோக்கத்துடன் சிலர் இப்படிச் செய்கிறார்கள். இதற்கும் அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தமில்லை' என அமைச்சர் பழனியப்பன் மூலமாகத் தலைமைக் கழகத்தின் அறிக்கை வெளியானது. இதையடுத்து அந்த பெட்டிஷன் வாபசும் பெறப்பட்டது.
ஆஸ்பத்திரி கூட வேண்டாம்
வழக்கமாக அரசியல்வாதிகள் சிறைக்கு சென்றதுமே, உடல் நிலையைக் காரணம் காட்டி மருத்துவமனையில் சொகுசாக இருப்பது வழக்கம். அதற்கு ஜெயலலிதா தரப்பு முயற்சிக்கவில்லை. காரணம், பரப்பன அக்ரஹாரா சிறையில் கிடைக்கும் வசதிகளும் கவனிப்பும் பாதுகாப்புமே காரணம் என்றும் கூறப்படுகிறது.
கெஞ்சியும் பலனில்லை
எனவேதான், கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, உள்துறை அமைச்சர் ஜார்ஜ் ஆகியோர், ஜெயலலிதாவை அழைத்துச் செல்ல தமிழகம் விரும்பினால் நாங்கள் தடை சொல்ல மாட்டோம் என்று பகிரங்கமாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்து பேட்டியளித்தும் கூட, கிணற்றில் போட்ட கல்போல தமிழக தரப்பில் இருந்து பதிலே வராமல் உள்ளது.