ஜெ. வழக்கில் தீர்ப்பு.. போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் பெங்களூர் நகரம்
பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீது திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், பெங்களூர் நகரில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி, சக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஜெயலலிதா அப்பீல் வழக்கில், திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஹைகோர்ட் தரப்பில் இருந்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் ரெட்டி மற்றும் கூடுதல், இணை போலீஸ் கமிஷனர்கள், இதுகுறித்து ஆலோசனை நடத்தினர்.
தீர்ப்பு தேதியன்று பெங்களூரில் குவிய உள்ள அதிமுகவினரை கட்டுப்படுத்துவது குறித்தும், அவர்களை எப்படி கண்காணிப்பது என்பது குறித்தும், அப்போது ஆலோசிக்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் தண்டனை கொடுத்தபோது, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட பெங்களூரு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரனையை, இம்முறையும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட நியமிக்க கமிஷனர் முடிவு செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை முதலே, தமிழகத்தில் இருந்து, பெங்களூருக்குள் வரும் வாகனங்களை தீவிர தணிக்கை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். கரைவேட்டி கட்சிக்காரர்களை, ஒசூர் எல்லையிலேயே இறக்கிவிடவும் திட்டமிட்டுள்ளனர். தீர்ப்பு வெளியானபோதும், இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.