சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலி: 3 நாட்களுக்கு தமிழக வாகனங்கள் பெங்களூரில் நுழைய தடை?
பெங்களூர்: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு 27ம்தேதி வழங்கப்பட உள்ள நிலையில், வரும் 25ம்தேதி முதல் தமிழக பதிவு எண் கொண்ட வாடகை வாகனங்களுக்கு பெங்களூருக்குள் நுழைய போலீசார் தடை விதிக்க உள்ளனர். இதனால் வணிகர்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வரும் 27ம்தேதி சனிக்கிழமை, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அன்றையதினம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா உத்தரவிட்டுள்ளார்.
பலத்த பாதுகாப்பு
ஜெயலலிதா இசெட் பிரிவு பாதுகாப்பில் உள்ளவர், மேலும், கர்நாடகா-தமிழகம் இடையே காவிரி உள்ளிட்ட விவகாரங்களில் மோதல் உள்ளது. இதனால் ஜெயலலிதா பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த சிரத்தை எடுத்து வருகிறது கர்நாடக காவல்துறை.
தமிழக அதிகாரி தலைமையில் டீம்
இதற்காக தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான பெங்களூர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரனை, ஜெயலலிதாவின் பாதுகாப்பு குழு தலைவராக நியமித்துள்ளது கர்நாடக அரசு. ஹரிசேகரன் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மட்டுமல்லாது, காமராஜர் அமைச்சரவையை அலங்கரித்த கக்கனின் பேத்தியை திருமணம் செய்தவர் என்பது சிறப்பு.
3வகை பாதுகாப்பு
ஹரிசேகரன் தலைமையிலான போலீஸ் குழு ஏற்கனவே சென்னைக்கு சென்று தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பாதுகாப்பு தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்து திரும்பியுள்ளது. ஜெயலலிதாவுக்கு மூன்று வகையில், பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. முதல்வருக்கான பாதுகாப்பு, முதல்வர் பயணிக்கும் பாதைக்கான பாதுகாப்பு, நீதிமன்ற வளாக பாதுகாப்பு என்ற வகையில் இந்த பாதுகாப்பு அமைய உள்ளது.
பெங்களூரில் ஹோட்டல் புக்
இதனிடையே ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பெங்களூரில் ஹோட்டல் அறைகளை புக் செய்துவிட்டனர். ஜெயலலிதா கோர்ட்டுக்கு செல்லும்போது இவர்களும் கோர்ட் வளாகத்தில் குழுமலாம் என்று திட்டமிட்டுள்ளனர். மேலும் ஜெயலலிதா செல்லும் வழியில் கட்-அவுட், பேனர் போன்றவற்றை வைத்து பெங்களூரை மற்றொரு சென்னையாக மாற்ற திட்டமிட்டுள்ளனர் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள். சென்ற முறை விசாரணைக்கு ஆஜராக ஜெயலலிதா பெங்களூர் வந்தபோதும் இதேபோல அமர்க்களப்படுத்தியிருந்த அனுபவம் அவர்களுக்கு உள்ளது.
வாகனங்களுக்கு தடை
இதையெல்லாம் கருத்தில் கொண்டு அதிமுக தொண்டர்களை கட்டுப்படுத்த கர்நாடக காவல்துறை திட்டமிட்டுள்ளது. எனவே, 25ம்தேதி முதலே, ஒசூர், உட்பட பெங்களூருக்கு வரும் அத்தனை ரோடுகளிலும் உள்ள செக்-போஸ்டுகளில் கூடுதல் போலீசாரை குவிக்க கர்நாடக காவல்துறை முடிவு செய்துள்ளது. 25ம்தேதி முதல் தமிழக பதிவு எண் கொண்ட வாடகை வாகனங்களை பெங்களூருக்குள் அனுமதிப்பதை தடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த முறை வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா பெங்களூர் வந்தபோது, அன்றைய தினம் மட்டும் இதுபோன்ற தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.